இயற்கை வேளாண்மையில் மலைக் காய்கறிகள்

சத்தியமங்கலத்தில் 15 ஏக்கர் பரப்பளவில் ரசாயனக் கலவையின்றி இயற்கை வேளாண்மையில் மலைக் காய்கறிகள் சாகுபடி செய்து விவசாயத்தில் கணிசமான லாபம் ஈட்டி வருகிறார் பெண் விவசாயி சசிகலா கோவிந்தராஜன். 
இயற்கை வேளாண்மையில் சாகுபடி செய்த சாத்துக்குடியை ஆய்வு செய்யும் கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவிகள்.
இயற்கை வேளாண்மையில் சாகுபடி செய்த சாத்துக்குடியை ஆய்வு செய்யும் கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவிகள்.

சத்தியமங்கலத்தில் 15 ஏக்கர் பரப்பளவில் ரசாயனக் கலவையின்றி இயற்கை வேளாண்மையில் மலைக் காய்கறிகள் சாகுபடி செய்து விவசாயத்தில் கணிசமான லாபம் ஈட்டி வருகிறார் பெண் விவசாயி சசிகலா கோவிந்தராஜன். 
சத்தியமங்கலத்தை அடுத்த சிக்கரசம்பாளையத்தைச் சேர்ந்தவர் சசிகலா கோவிந்தராஜன் (46). விவசாயப் பாரம்பரியம் இல்லாத குடும்பத்தில் பிறந்த இவர் திருமணத்துக்குப் பிறகு விவசாயத்தைப் பற்றி தெரிந்துகொண்டார். விவசாயத்தில் ஆர்வம் காட்டி வரும் சசிகலா கலப்படமில்லாத இயற்கை வேளாண் சாகுபடிக்கு மாறியுள்ளார். தற்போது இவரது தோட்டத்தில் ரசாயன கலவை இல்லாமல் இயற்கை உரம் தயாரித்து மலைப் பகுதி விளை பொருள்களை சாகுபடி செய்து வருகிறார்.
களைச்செடிகள், கால்நடைகளின் சாணம், கழிவுநீரை வைத்து பஞ்சகவ்யா, தொல்லுயிர் கரைசல், அமுதக் கரைசல், மோர் கரைசல் என இயற்கை உரம் தயாரித்து தென்னை சாகுபடியில் ஊடு பயிராக பாக்கு, சேனைக்கிழங்கு சாகுபடி செய்து வருகிறார்.
நீர் மேலாண்மை

நீலகிரி, தாளவாடி ஆகிய பகுதியில் விளையக் கூடிய ஆரஞ்சு, எலுமிச்சை, கோகோ, வெண்ணெய் பழ ரகங்களை சாகுபடி செய்து சென்னை போன்ற மாநகரங்களுக்கு விற்பனை செய்து வருகிறார். அதோடு மஞ்சள், தக்காளி, கத்தரி, பீட்ரூட், புடலை, வாழைப் பழம் ஆகியவற்றின் மகசூலை அதிகப்படுத்தியும் விவசாயிகளை ஊக்குவித்துள்ளார். 
தென்னை மரங்களிடையே தேனீ வளர்க்கும்போது அதன் வளர்ச்சி இயற்கையாக இருக்கும் என்பதால் 5 தேனீப் பெட்டிகள் வைத்து தேன் உற்பத்தி செய்து வருகிறார். 
சொட்டுநீர்ப் பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சியும், தென்னை மரங்களின் அடிபாகத்தில் தென்னைக் கீற்றுகளை வைத்து ஈரப்பதம் தொடர்ந்து இருக்கும்படி அதனை சமநிலைப்படுத்தியும் நீர் மேலாண்மையைப் பின்பற்றி விவசாயத்தை லாபகரமாக மாற்றியுள்ளார்.
மாணவ, மாணவியர் ஆர்வம்

இயற்கை வேளாண்மையில் ஆர்வம் காட்டி வரும் சசிகலாவை கோவை வேளாண்மை பல்கலைக்கழக மாணவிகள் திங்கள்கிழமை சந்தித்து இயற்கை வேளாண்மையில் பெண்களின் பங்கு குறித்து கேட்டறிந்தனர். மேலும், சமவெளிப் பகுதியான சத்தியமங்கலத்தில் நீலகிரி, தாளவாடியில் விளையக் கூடிய ஆரஞ்சு, எலுமிச்சை, கோகோ, வெண்ணெய்பழம், பாக்கு, சேனைக்கிழங்கு ஆகிய பயிர்களை சாகுபடி செய்யும் முறையையும் பார்வையிட்டு, தேனீ வளர்ப்பு, அதன் உற்பத்தி, இயற்கையாக உரம் தயாரித்தல், சாகுபடி காலம், அதனை சந்தைப்படுத்துதல் குறித்தும் ஆர்வமுடன் கேட்டறிந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com