சொட்டு நீர்ப் பாசனத்துக்கு 100 சதவீத மானியம்: தோட்டக்கலை துறை அதிகாரி தகவல்

சொட்டு நீர்ப் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம் வழங்கப்படும் என தோட்டக்கலை துணை இயக்குநர் முத்து துரை அறிவித்துள்ளார்.
திருவள்ளூரை அடுத்த பிரையாங்குப்பம் பகுதியில் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள சொட்டு நீர்ப் பாசனம்.
திருவள்ளூரை அடுத்த பிரையாங்குப்பம் பகுதியில் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள சொட்டு நீர்ப் பாசனம்.

சொட்டு நீர்ப் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம் வழங்கப்படும் என தோட்டக்கலை துணை இயக்குநர் முத்து துரை அறிவித்துள்ளார்.
திருவள்ளூரை அடுத்த பிராயாங்குப்பத்தில் விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசனம் அமைப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் தோட்டக்கலை துறை துணை இயக்குநர் முத்து துரை கலந்து கொண்டு விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்கும் முறை, அதனால் ஏற்படும் நன்மைகள், அரசு வழங்கும் மானியம் ஆகியன குறித்து விளக்கி கூறினார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாளுக்கு நாள் நீரின் தேவை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நீரை சிக்கனமாக பயன்படுத்தி, பயிர் செய்வது குறித்து, தோட்டக்கலை துறை சார்பில் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, தற்போது பிரதம மந்திரியின் விவசாயத்துக்கான சொட்டு நீர் பாசன திட்டத்தின் கீழ், பயிர் செய்யும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு, 5 ஏக்கர் வரை 100 சதவீத மானியமும், பெரு விவசாயிகளுக்கு, 12.5 ஏக்கர் வரை, 75 சதவீத மானியமும் வழங்கப்படும்.
இதில், அதிகபட்சமாக விவசாயிகள் ரூ.5 லட்சம் வரை மானியம் பெறலாம்.
தகுதி: வருவாய்த்துறை நில வகைப்பாட்டின் படி நிலம் வைத்துள்ள விவசாயிகள், இம்மானிய உதவி பெற தகுதியானவர்கள்.
மேலும், சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகளுக்கு நீர் இறைக்கும் மோட்டாருடன் கூடிய கிணறோ, ஆழ்துளைக் கிணறோ போதிய நீராதாரத்துடன் இருக்க வேண்டும்.
சிறு, குறு விவசாயிகளுக்குரிய சான்றிதழை வட்டாட்சியரிடம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். மேலும், நிலத்தின் கணினி பட்டா, சாகுபடி செய்துள்ள அல்லது செய்யவுள்ள பயிர் பரப்பை சர்வே எண்கள் வாரியாகக் குறிப்பிட்டு கிராம நிர்வாக அலுவலர் வழங்கிய அடங்கல், வயல் வரைபட நகல், குடும்ப அட்டை நகல் அல்லது வாக்காளர் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், மண் மற்றும் நீர் மாதிரி சான்று ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
மா, கொய்யா, வாழை, சப்போட்டா, மிளகாய், முருங்கை, மலர்கள் போன்ற தோட்டக்கலை பயிர்களைச் சாகுபடி செய்யும் சிறு, குறு விவசாயிகள் வட்டார தோட்டக்கலை துறை அலுவலர்களை அணுகி பயன்பெறலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com