நெற்பயிரில் இலை சுருட்டுப்புழு

நெற்பயிரில் இலை சுருட்டுப்புழுவைக் கட்டுப்படுத்த விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து, மதுக்கூர் வேளாண்மை உதவி இயக்குநர் வை.தயாளன் வெளியிட்டுள்ள செய்திக்
நெற்பயிரில் இலை சுருட்டுப்புழு

பட்டுக்கோட்டை: நெற்பயிரில் இலை சுருட்டுப்புழுவைக் கட்டுப்படுத்த விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து, மதுக்கூர் வேளாண்மை உதவி இயக்குநர் வை.தயாளன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
நெற்பயிரில் தற்போது நிலவும் பருவ நிலை மாற்றம் காரணமாக இலை சுருட்டுப்புழு தாக்குதலுக்கு வாய்ப்பு உள்ளது. இவற்றை ஒருங்கிணைந்த முறைகளைக் கையாண்டு கட்டுப்படுத்தலாம்.
நெல் வயல்களில் வளரும் அல்லது தூர் பிடிக்கும் பருவத்தில் உள்ள இளம் பயிர்களைத் தாக்கும் இப்புழுக்கள், இலைகளை உள்பக்கமாக சுருட்டி உள்ளிருந்து பச்சையத்தை சுரண்டி உண்கின்றன. 
இதனால் இலைகள் வெள்ளை நிற சுரண்டல்களுடன் காணப்படும். இலைகள் நீளவாக்கில் சுருண்டு, புழுக்கள் அதனுள்ளே இருந்து விடும். தீவிர தாக்குதலின்போது, முழு நெல் வயலும் வெண்மையான நிறத்தில் காய்ந்தது போல் காட்சியளிக்கும். தாக்குதல் அதிகமானால் செடிகள் காய்ந்து விடும். இப்பூச்சியின் தாக்குதல் இருக்கும் சமயத்தில் தழைச்சத்து உரமிடுவதை குறைத்துக்கொள்ள வேண்டும். 
சேதம் விளைவிக்கும் பூச்சிகளை விவசாயிகள் அடையாளம் காண்பது மிகவும் அவசியம். பூச்சிகளின் முட்டைகள் தட்டையான முட்டை வடிவத்தில் மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்திலும், புழுக்கள் பச்சையான நிறத்தில் ஒளி கசியும் தன்மை கொண்டும் காணப்படும். முன்மார்புக் கேடயம் நுனி நோக்கி நிமிர்ந்தும், பக்கவாட்டில் உருளையாகவும் காணப்படும். தொடர்ந்து 7-10 நாள்கள் கூட்டுப் புழுக்களாக இருக்கும். அந்துப் பூச்சியான முதிர்பூச்சிகள் மஞ்சளான பழுப்பு நிற இறக்கைகளைக் கொண்டது. அதில் கருப்பு நிறத்தில் அலை போன்ற கோடுகள் நடுவிலும், இறக்கைகளின் ஓரத்திலும் காணப்படும். 
நெற்பயிரில் சேதத்தை ஏற்படுத்தும் இலைச் சுருட்டுப் புழுக்களைக் கட்டுப்படுத்த வரப்புகளை சீராக்கி, சுத்தமாக வைத்திருக்க வேண்டும். புல் களைகளை நீக்கியும் இப்பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். விளக்குப் பொறிகளை வைத்து அந்துப் பூச்சிகளை கவர்ந்து, அதனை கொல்ல வேண்டும். 10 ஏக்கருக்கு குறைந்தது 1 விளக்குப் பொறியாவது வைக்க வேண்டும். 
நெற்பயிரின் வளர்ச்சிப் பருவத்தில் பூச்சியை உண்ணும் பறவைகள் நிற்பதற்காக தென்னை குரங்கு மட்டைகளை ஏக்கருக்கு 20 எண்ணிக்கையில் ஆங்காங்கே வயல்களில் பொருத்த வேண்டும். பொருளாதார சேத நிலை அளவு, வளர்ச்சிப் பருவத்தில் 10 சதவீதம் இலைச்சேதம் மற்றும் பூக்கும் பருவத்தில் 5 சதவீதம் கண்ணாடி இலைச் சேதத்திற்கு மேற்பட்டால் மட்டுமே கீழ்வரும் பூச்சிக்கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை தெளிக்க வேண்டும்.
ஏக்கருக்கு மோனோகுரோட்டோபாஸ் 36 எஸ்எல் 400 மிலி அல்லது அசிபேட் 400 கிராம் அல்லது கார்டாப் ஹைட்ரோகுளோரைடு 400 கிராம் தெளிக்க வேண்டும். 
தவிர, ஏக்கருக்கு 10 கிலோ வேப்பங்கொட்டைச்சாறு அல்லது 600 மில்லி வேப்பெண்ணையை தெளிக்க வேண்டும். விவசாயிகள் மேற்கூறிய ஒருங்கிணைந்த முறைகளைக் கையாண்டு, நெற்பயிரில் இலைச்சுருட்டுப் புழுவின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com