அனைத்து வகை மண்ணுக்கும் ஏற்ற சப்போட்டா!

பழப் பயிர்களை சாகுபடி செய்வதில் ஆர்வமுள்ள விவசாயிகள் அனைத்து வகை மண்ணிலும் வளரும் சப்போட்டாவை தேர்வு செய்து, நீடித்த லாபத்தை ஈட்டலாம் என தோட்டக்கலைத்துறை அறிவுறுத்தியுள்ளது.
அனைத்து வகை மண்ணுக்கும் ஏற்ற சப்போட்டா!

திருநெல்வேலி: பழப் பயிர்களை சாகுபடி செய்வதில் ஆர்வமுள்ள விவசாயிகள் அனைத்து வகை மண்ணிலும் வளரும் சப்போட்டாவை தேர்வு செய்து, நீடித்த லாபத்தை ஈட்டலாம் என தோட்டக்கலைத்துறை அறிவுறுத்தியுள்ளது.
சப்போட்டா எவ்வகை மண்ணிலும் செழித்து வளரும். நல்ல வடிகால் வசதியான மண் ஏற்றது. ஆழமான வண்டல் மண் கலந்த நிலங்கள் மிகவும் உகந்தது. சப்போட்டா ஓரளவு உப்புத் தன்மையுள்ள நிலங்களிலும் உப்புத் தன்மை கொண்ட நீரையும் தாங்கி வளரும்.
ரகங்கள்: கிரிக்கெட் பால், ஓவல், பாராமசி, தகரப்புடி, துவாரப்புடி, கீர்த்தபர்த்தி, பாலா, காளிப்பட்டி, கோ.1, கோ 2, பெரியகுளம் 2, பெரியகுளம் 3 , பெரிய குளம் 4 , பெரிய குளம் 5 ஆகிய ரகங்கள் ஏற்றவை.
பருவம்: சப்போட்டா சாகுபடிக்கு பொதுவாக ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் சிறந்தவை.
செடிகள் நடுதல்: சப்போட்டா பயிரிட 8 மீட்டருக்கு இடைவெளியில் 60 செமீ நீளம், அகலம், 60 செமீ ஆழம் என்ற அளவில் குழிகள் எடுக்க வேண்டும். குழிகளை சிறிது நாள்களுக்கு ஆறவிட வேண்டும். 10 கிலோ மக்கிய தொழு உரம், ஒரு கிலோ வேப்பம் பிண்ணாக்கு இட்டு மேல் மண் காலங்களிலேயே செடிகள் நடப்படுதல் வேண்டும். செடிகள் நட்ட உடன், செடிகளுக்கு இருபுறமும் குச்சிகள் வைத்துக் கட்டுவதால் காற்றில் செடிகள் ஆடிச் சேதமடைவதைத் தவிர்க்கலாம்.
நீர் நிர்வாகம்: மகரந்தச் சேர்க்கை நல்ல முறையில் நடைபெற்று காய் அதிகம் பிடிக்க குறைந்த பட்சம் 2 அல்லது 3 மரம் இருக்குமாறு நட வேண்டும். செடிகள் நட்ட சிறிது நாளுக்கு, 2 முதல் 3 நாளுக்கு ஒருமுறை பின்னர் 4 முதல் 5 நாளுக்கு ஒருமுறை என்ற அளவிலும் நீர் ஊற்றவேண்டும். ஓராண்டுக்குப் பிறகு 10 முதல் 15 நாளுக்கு ஒருமுறை என்ற அளவில் நீர் பாய்ச்சலாம். சப்போட்டா சிறந்த முறையில் வறட்சியைத் தாங்குவதால் மானாவாரிப் பயிராகவே பயிரிடலாம்.
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை: சாதாரணமாக செடி நடும்போது ரசாயன உரம் எதுவும் இடவேண்டியதில்லை. ஒரு வயது முடிந்தபின், செடிக்கு 200 கிராம் தழைச்சத்து, 200 கிராம் மணிச்சத்து, 300 கிராம் சாம்பல் சத்து என்ற அளவிலும், இதையே ஆண்டு ஒன்றுக்கு 200: 200: 300 கிராம் என்ற அளவில் அதிகரித்தும் வழங்க வேண்டும். 5 ஆண்டுளுக்குப் பிறகு 1 கிலோ தழைச்சத்து, 1 கிலோ மணிச்சத்து மற்றும் 1.5 கிலோ சாம்பல் சத்து என்ற அளவில் இடவேண்டும். மக்கிய தொழு உரம் ஒரு செடிக்கு 30 முதல் 50 கிலோ என்ற அளவில் இடுவது நல்லது.
மேற்படி உர அளவை, நீர்ப் பாசன வசதியுள்ள பகுதிகளில் கோடைக் காலத்தில் ஒருமுறையும், மழைக் காலத்தில் ஒருமுறையும் என 2ஆகப் பிரித்து இடலாம். இதன் மூலம் செடிகளின் வளர்ச்சி சீராக இருப்பதோடு, உர சேதமும் தடுக்கப்படும்.
களைக் கட்டுப்பாடு, பின்செய் நேர்த்தி: ஒட்டுப் பகுதிகளின் கீழே தழைத்துவரும் வேர்ச் செடியின் தளிர்களை அவ்வப்போது அகற்றவேண்டும். தரைநிலையிலிருந்து 2 அடி உயரம் வரை கிளைகள் எதுவும் பிரியாமல் பார்த்துக் கொள்வது நல்லது. கிளைகள் மரத்தில் சீராகப் பரவி இருக்கவேண்டும். சப்போட்டா மரத்துக்கு கவாத்து செய்யத் தேவை இல்லை. உயரமாக வளரும் ஒருசில தண்டுகளை மட்டும் நீக்க வேண்டும். அடர்த்தியான, நிழல் விழும் கிளைகளையும் நீக்கிவிடவும்.
கரும் பூஞ்சாண நோய்: சப்போட்டாவில் இந்நோயைக் கட்டுப்படுத்த ஒரு கிலோ மைதா அல்லது ஸ்டார்ச் வினையை 5 லிட்டர் நீரில் கலந்து கொதிக்க வைக்கவேண்டும். ஆறிய பின் 20 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவேண்டும். மேகமூட்டம் இருக்கும்போது தெளிக்கக் கூடாது.
அறுவடை: முதிர்ந்த காய்கள் வெளிறிய பழுப்பு நிறத்தில் இருக்கும். அதன் சதைப் பகுதி வெளிறிய மஞ்சள் நிறத்தில் இருக்கும்போது அறுவடை செய்யவேண்டும். பொதுவாக பழங்கள் பிப்ரவரி, ஜூன், செப்டம்பர், அக்டோபரில் அறுவடைக்கு வரும். அறுவடை செய்த பழங்களை 5,000 பி.பி.எம் எத்ரல், 10 கி சோடியம் ஹைட்ராக்ஸைடு கலவையுடன் காற்றுப் புகாத அறையில் வைக்கவேண்டும்.
மகசூல்: ஆண்டுக்கு ஹெக்டேருக்கு 25 டன் பழங்கள்வரை கிடைக்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com