குருத்துப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: வேளாண் விஞ்ஞானிகள் விளக்கம்

நெற்பயிரில் குருத்துப்பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து, நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் பரிந்துரை அளித்துள்ளனர்.
குருத்துப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: வேளாண் விஞ்ஞானிகள் விளக்கம்

நீடாமங்கலம்: நெற்பயிரில் குருத்துப்பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து, நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் பரிந்துரை அளித்துள்ளனர்.
இதுதொடர்பாக, நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் முனைவர் ராஜா.ரமேஷ், முனைவர் ஆ. பாஸ்கரன்ஆகியோர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தற்போது பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர் நாற்றங்கால் மற்றும் நடவு வயல்களில் ஆங்காங்கே குருத்துப்பூச்சி தாக்குதல் காணப்படுகின்றன. அக்டோபர் முதல் ஜனவரி மாதம் வரை இதன் தாக்குதல் அதிகமாகக் காணப்படும்.
நாற்றங்கால் மற்றும் நடவு வயலிலுள்ள இளம் பயிர்களின் தூர்கட்டும் பருவம் வரை தாக்கும்போது நடுக்குருத்து காய்ந்து விடும் அல்லது இறந்த குருத்துக்கள் உண்டாகும். அதைப் பிடித்து இழுத்தால் எளிதாக கையோடு வந்துவிடும். பயிர் நன்கு வளர்ந்து பால் பிடிக்கும் பருவத்தில் தாக்குதல் காணப்படும்போது, நெற்கதிருக்கு செல்லும் உணவு தடைப்பட்டு, நெல் மணிகள் பால் பிடிக்க முடியாமல் வெளிவரும் கதிர்கள் அனைத்தும் வெண் அல்லது சாவி கதிர்களாக மாறிவிடும்.
பொருளாதார சேதநிலை: இளம் பயிரில் ஒரு சதுர மீட்டருக்கு குருத்துப்பூச்சிகளின் 2 முட்டைக் குவியல்கள் இருத்தல் அல்லது ஒரு சதுர மீட்டருக்கு 1 அல்லது அதற்கு மேற்பட்ட குருத்துப்பூச்சிகள் காணப்படுதல். வளர்ச்சி பருவத்தில் 10 சதவீத நடுக்குருத்து காய்ந்து விடுதல் அல்லது 2 சதவீத வெண்கதிர்கள் காணப்படுதல்.
குருத்துப்பூச்சியின் தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள்:
1. நாற்றுகளை வயலில் நடும்போது முட்டைக் குவியல்கள் உள்ள இலைகளின் நுனிகளை கிள்ளிவிட்டு நடவு செய்ய வேண்டும்.
2. இனக் கவர்ச்சிப் பொறிகளை நடவு செய்த 10 நாள்களுக்குப் பிறகு ஏக்கருக்கு 5 என்ற அளவில் வைத்து, ஆண் குருத்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்க வேண்டும்.
3. டிரைக்கோகிரம்மா ஜப்பானிக்கம் என்ற முட்டை ஒட்டுண்ணியை இரு முறை 2சிசி (40,000 முட்டைகள்) என்ற அளவில் இரு முறை அதாவது நடவு நட்ட 30 மற்றும் 37-ஆவது நாள்களில் வயலில் வெளியிட வேண்டும்.
4. வேப்ப எண்ணெய் 3 சதவீதம் அதாவது ஒரு லிட்டர் தண்ணீருக்கு 30 மிலி அல்லது 5 சதவீதம் வேப்பங்கொட்டைக் கரைசலை தேவையான அளவு ஒட்டும் திரவத்துடன் கலந்து தெளிக்க வேண்டும்.
5. ஒரு ஏக்கருக்கு ஃப்ளுபென்டியாமைட் 20டபிள்யூ.ஜி- 50கிராம், ஃப்ளுபென்டியாமைட் 39.35 எஸ்.சி - 20 மிலி, கார்டாப் ஹைட்ரோ குளோரைடு 50எஸ்.பி.- 400 கிராம், குளோரன்ட்ரான்லிபுரோல் 18.5 எஸ்.சி.- 60 மிலி, பிப்ரோனில் 5 எஸ்.சி.- 400 மிலி ஆகிய பூச்சிக்கொல்லி மருந்துகளில் ஏதாவது ஒரு மருந்தை ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு காலை அல்லது மாலை வேளைகளில் தெளிக்க வேண்டும். 
6. வயலில் காணப்படும் நன்மை செய்யும் பூச்சிகளான சிலந்திகள், தரை வண்டுகள், ஒட்டுண்ணி குளவிகள், நீர்த்தாண்டி, நீர் மிதப்பேன், தட்டான்கள், இடுக்கிவால் பூச்சிகள் போன்றவற்றை பாதுகாத்து பெருக்குதல் போன்றவற்றினால் குருத்துப் பூச்சிகள் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம் என தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com