பூச்சி, நோய் கண்காணிப்பு, கட்டுப்பாட்டு முறைகள்

தமிழக விவசாயிகளுக்கு செப்டம்பர் மாதத்துக்கான பூச்சி, நோய் கண்காணிப்பு, கட்டுப்பாட்டு முறைகள் குறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
பூச்சி, நோய் கண்காணிப்பு, கட்டுப்பாட்டு முறைகள்

கோவை: தமிழக விவசாயிகளுக்கு செப்டம்பர் மாதத்துக்கான பூச்சி, நோய் கண்காணிப்பு, கட்டுப்பாட்டு முறைகள் குறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது பூச்சி, நோய்களின் தாக்கமானது பொருளாதார சேத நிலைக்குக் குறைவாகவே உள்ளது. எனவே, விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் உள்ள பூச்சி, நோய்களின் தாக்குதல் அறிகுறிகளை விளக்குப் பொறி, மஞ்சள் ஒட்டும்பொறி, இனக் கவர்ச்சிப் பொறிகளை வைத்துக் கண்காணிக்க வேண்டும்.
நெற்பயிர்
நாற்றங்காலில் (20 சென்டுக்கு) இலைப்பேன் தாக்குதலைக் கட்டுப்படுத்த பாஸ்போமிடான் 40 எஸ்.எல். 50 மில்லியை 20 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவும். நெல்லில் இலைச்சுருட்டுப் புழு, தண்டுத் துளைப்பான் தாக்குதலைக் கண்டறிந்து கட்டுப்படுத்துவதற்கு வயல்களில் விளக்குப் பொறி (ஏக்கருக்கு 1வீதம்) வைக்க வேண்டும்.
தேவைப்பட்டால் வேப்பங் கொட்டைச் சாறு 5 சதம், ஹெக்டேருக்கு 25 கிலோ அல்லது குளோர்பைரிபாஸ் 1,250 மில்லி அல்லது கார்டாப் ஹெக்டேருக்கு 1,000 கிராம் வீதம் பயிர்களில் தெளிக்க வேண்டும்.
தற்பொழுது காலநிலை மேகமூட்டத்துடனும், அடிக்கடி மழை பெய்தும் வருவதால் பாக்டீரியா இலைக் கருகல், குலை நோய் தாக்கும் வாய்ப்புள்ளது. எனவே, விவசாயிகள் இவ்விரு நோய்கள் தென்படுவதைக் கண்காணிக்க வேண்டும்.
தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் நெற்பயிர்களில் இலைப்புள்ளி நோயின் தாக்குதல் தென்படுகிறது. எனவே, விவசாயிகள் குறிப்பாக இயந்திரம் மூலம் நடவு செய்யும் விவசாயிகள் நாற்றங்கால், நடவு நட்ட வயல்களில் மான்கோசோப் 1 லிட்டர் நீருக்கு 2 கிராம் தேவைக்கு ஏற்ப 2 அல்லது 3 முறை 10-15 நாள்கள் இடைவெளியில் நோயின் தாக்கத்துக்கு ஏற்ப தெளிக்கவும்.
கரும்பு
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி பகுதிகளில் கரும்பு பயிரில் நுனிக் குருத்துப் புழு, இடைக் கணு புழு சேதம் கண்டறியப்பட்டுள்ளன. இந்தச் சேதத்தைக் கட்டுப்படுத்த கீழ்க்கண்ட மேலாண்மை முறைகளைக் கையாள வேண்டும்.
1. நன்கு விளைந்த, நுனிக்குருத்துப் புழு, இடைக்கணு புழு தங்கிய கரும்பை முன்னுரிமை அடிப்படையில் அறுவடை செய்து அரவைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
2. தாக்கப்பட்ட கரும்புகளை உடனடியாக அறுவடை செய்ய வேண்டும். இதன் மூலம் பூச்சிகள் மேலும் பெருகுவதையும், மற்ற இளம் பயிர்களுக்குப் பரவுதலையும் கட்டுப்படுத்தலாம்.
3. நுனிக் குருத்துப் புழு, இடைக்கணு புழு பூச்சிகளைத் தொடர்ந்து கண்காணிக்க இனக்கவர்ச்சிப் பொறிகளை ஒரு ஹெக்டேருக்கு 20 வீதம் வைக்க வேண்டும்.
4. ட்ரைக்கோகிராமா கைலோனிஸ் 2.5 சி.சி. (ம) டிரைக்கோகிரமா ஜப்பானிக்கம் என்ற முட்டை ஒட்டுண்ணிகளை வாரம் ஒரு முறை வைப்பதால் துளைப்பான்களின் தாக்கம் குறையும்.
5. நீர் தேக்கம் இல்லாதவாறு நிலத்தைப் பராமரிக்க வேண்டும்.
6. காய்ந்த கரும்பு சோகைகளை நட்ட பின் 5, 7 மாதங்களில் நீக்க வேண்டும்.
7. விட்டம் கட்டுவதை செயல்படுத்துவதால் ஒட்டுமொத்த துளைப்பான் தாக்குதலில் இருந்து பாதுகாக்கலாம்.
பருத்தி


பெரம்பலூர், சேலம் மாவட்டங்களில் சாறு உறிஞ்சும் பூச்சிகளான இலைப்பேன், வெள்ளை ஈக்களின் பாதிப்பு தென்படுகிறது. எனவே, இவற்றைக் கண்காணிக்க விவசாயிகள் மஞ்சள் ஒட்டும் பொறி 12.5 எண்ணிக்கை (ஒரு ஹெக்டேருக்கு) வைக்கவும். மேலும், மீன் எண்ணெய் சோப் 2.5 கிலோவை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம் அல்லது இமிடாகுளோபிரிட் 100 மி.லி. நீர்மக் கரைசலை (ஹெக்டேருக்கு) பயன்படுத்தலாம்.
பருத்தியில் சிவப்பு காய்ப் புழுவின் தாக்குதல் தென்படுவதால் இனக்கவர்ச்சிப் பொறிகளை வைத்து அந்திப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம். தேவைப்பட்டால் டிரையசோபாஸ் 2,500 மி.லி. (ஹெக்டேருக்கு) அல்லது குயினால்பாஸ் 2,000 மி.லி. அல்லது தயோடிகார்ப் 1,000 கிராம் தெளிக்கலாம்.
அசுவினி, இலைப்பேன்களைக் கட்டுப்படுத்த மித்தைல் டெமாட்டான் 25 இ.சி 500 மில்லி (அ) டைமித்தோயோட் 500 மில்லி (அ) புப்ரோபோசின் 25 எஸ்.சி 1,000 மில்லி என்ற அளவில் ஒரு ஹெக்டேருக்கு 500 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
நிலக்கடலை
இலைத் துளைப்பானின் நடமாட்டத்தைக் கண்டறிய விளக்குப் பொறி ஏக்கருக்கு ஒன்று வைத்து கண்காணிக்கவும். விளக்குப் பொறியில் அந்திப் பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக இருப்பின் உடனடியாக டைகுளோட்வாஸ் 76 டபிள்யு.எஸ்.சி. 500 மில்லி அல்லது குளோர்பைர்பாஸ் 20 இ.சி. 500 மில்லி (ஏக்கருக்கு) அல்லது பாசலோன் 35 இ.சி. 300 மில்லி என்ற அளவில் தெளிக்க வேண்டும்.
கோவை மாவட்டத்திலும், திண்டிவனம் பகுதியிலும் நிலக்கடலையில் வேர் அழுகல் நோய், இலைப்புள்ளி நோய்த் தாக்குதல் ஏற்படலாம். வேரழுகல் நோயைக் கட்டுப்படுத்த கார்பன்டாசிம் பூசணக்கொல்லி 0.1 சதவீதம் என்ற அளவில் மண்ணில் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
முன்பருவ இலைப்புள்ளி நோயை மேன்கோசெப் (அ) குளோரோதலோனில் 1,000 கிராம் (ஒரு ஹெக்டேருக்கு) தெளித்து கட்டுப்படுத்தலாம்.
பயறு
புதுக்கோட்டை, தேனி, நெல்லை மாவட்டங்களில் உளுந்து, பச்சைப் பயறில் வேர் அழுகல் நோய், மஞ்சள் தேமல் நோய் ஏற்படுகிறது. 
இதைக் கட்டுப்படுத்த கார்பன்டாசிம் மருந்தை லிட்டருக்கு 1 கிராம் என்ற அளவில் செடியைச் சுற்றி விட வேண்டும்.
மஞ்சள் நிற ஒட்டுப் பொறியை 15 என்ற அளவில் அமைக்க வேண்டும். மேலும், வேப்ப எண்ணை 2 மில்லி (அ) டைமீத்டோயேட் அல்லது மெத்தில் டெமட்டான் மருந்தை லிட்டருக்கு 2 மிலி என்ற அளவில் தெளிக்க வேண்டும்.
வாழை
கோவை, ஈரோடு, திருச்சி மாவட்டங்களில் வாழையில் இலைப்புள்ளி நோய்த் தாக்குதல் காணப்படுகிறது.
இதைக் கட்டுப்படுத்த கார்பன்டாசிம் 0.1 சதவீதம் அல்லது புராப்பாகோனேசோல் 0.1 சதவீதம் அல்லது மான்கோசெப் 0.25 சதவீதம் ஒட்டும் திரவமான டீப்பால் சேர்த்து 3 முறை 10-15 நாள்கள் இடைவெளியில், அறிகுறிகள் ஆரம்பித்ததில் இருந்து இலையின் அடிப்பகுதியில் தெளிக்க வேண்டும்.
பியூசேரியம் வாடல் நோயைக் கட்டுப்படுத்த கார்பன்டாசிம் 2 கிராமை ஒரு லிட்டர் நீரில் கரைத்து, கரைசலில் 30 நிமிடம் கிழங்கை நனைத்து நடவு செய்யவும். மரத்தின் 3, 5, 7-ஆம் மாதத்தில் கார்பன்டாசிம் 2 விழுக்காடு (20 கிராம்) கரைசல் தயாரித்து 3 மி.லி.யை கிழங்கினுள் செலுத்தவும். 
நோய் தாக்கப்பட்ட மரம், அதைச் சுற்றியுள்ள மற்ற வாழை மரங்களுக்கும் கார்பன்டாசிம் (1 கிராம்) தயாரித்து மரத்தைச் சுற்றி 2, 4, 6-ஆம் மாதத்தில் ஊற்ற வேண்டும்.
வெங்காயம்
வெங்காயத்தில் இலைச் சரும கொப்புளங்கள் ஏற்பட்டால் இதைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் நீரில் மேன்கோசெப் 2 கிராம் அல்லது காப்பர் ஆக்ஸிகுளோரைடு 2.5 கிராம் என்ற விகிதத்தில் தெளிக்கவும். 
அடித்தண்டு அழுகல் நோயைக் கட்டுப்படுத்த ட்ரைக்கோடெர்மா விரிடி என்ற பூஞ்சாணக் கொல்லியை ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற அளவிலும், ஹெக்டேருக்கு 2.5 கிலோ என்ற வீதமும் மண்ணில் இட வேண்டும்.
தென்னை
பொள்ளாச்சி பகுதியில் தென்னையில் வெள்ளை ஈக்களின் பாதிப்பு பரவலாகத் தென்படுகிறது.
இரைவிழுங்கிப் பூச்சிகள், வெள்ளை ஈக்களுடன் சேர்ந்து காணப்படுகிறது. தேவை ஏற்பட்டால் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பூச்சியியல் துறையை அணுகி இரைவிழுங்கிப் பூச்சிகளைப் பெற்று ஒரு முறை பரவலாக தோப்புகளில் விடுவதால் அவை பெருகி வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்தும்.
தோட்டக்கலைப் பயிர்களில் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் கட்டுப்பாடு
சாறு உறிஞ்சும் பூச்சிகளான தத்துப் பூச்சி, இலைப்பேன், வெள்ளை ஈ, சுருள் வெள்ளை ஈ, மாவுப் பூச்சியின் சேதம் அதிகமாக வாய்ப்புள்ளது. எனவே விவசாயிகள் மஞ்சள் ஒட்டும் பொறியை ஏக்கருக்கு 5 வீதம் வைத்து நடமாட்டத்தைக் கண்டறியலாம்.
தேவைப்படின் வேப்பங்கொட்டைச்சாறு 5 சதம் அல்லது மீன் எண்ணெய் சோப் 1 கிலோ 40 லிட்டர் தண்ணீருக்கு என்ற அளவில் தெளித்துக் கட்டுப்படுத்தவும். வெள்ளை ஈயின் நடமாட்டத்தை மஞ்சள் ஒட்டும் பொறி (ஹெக்டேருக்கு 12) அமைத்து கண்காணிக்கவும். தேவைப்படின் மித்தைல் டெமட்டான் அல்லது டைமித்தோயேட் 2 மில்லியை 1 லிட்டர் நீரில் கரைத்து தெளிக்கவும்.
காய்கறி
காய்கறி பயிர்களில் காய்ப் புழுக்களைக் கட்டுப்படுத்த இனக்கவர்ச்சி பொறிகள் (ஹெக்டேருக்கு 12) அமைத்து அந்திப்பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்டறியவும். தாக்கப்பட்ட காய்கள், வளர்ந்த புழுக்களைக் கைகளால் எடுத்து அப்புறப்படுத்தவும். தேவைப்பட்டால் பேசில்லஸ் துரிஞ்சியசிஸ் 2 கிராமை ஒரு லிட்டரில் கலந்து தெளிக்கவும். இது குறித்த மேலும் தகவல்களுக்கு பல்கலைக்கழகத்தின் பயிர்ப் பாதுகாப்பு மையம் அல்லது வேளாண் பூச்சியியல் துறை அல்லது பயிர் நோயியல் துறையை கீழ்க்கண்ட எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம். 0422-6611237, 0422-6611414, 0422-661226.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com