தோட்டப் பயிராக எலுமிச்சை!

எலுமிச்சையைத் தோட்டப் பயிராக சாகுபடி செய்து விவசாயிகள் பயன்பெறலாம்.
தோட்டப் பயிராக எலுமிச்சை!

எலுமிச்சையைத் தோட்டப் பயிராக சாகுபடி செய்து விவசாயிகள் பயன்பெறலாம்.
எலுமிச்சையில் சாதாரண ரகம், கொடி எலுமிச்சை என 2 ரகங்கள் உள்ளன. சாதாரண எலுமிச்சை மண் பரப்பில் பயிரிடப்படுகிறது. கொடி எலுமிச்சை மலைப் பகுதிகளில் மட்டுமே பயிரிடப்படுகிறது.
மண், தட்பவெப்ப நிலை: 2 மீட்டர் ஆழத்துக்கு மண் கண்டம் இருக்க வேண்டும். நல்ல வடிகால் வசதி கொண்ட செம்மண் கலந்த தோட்டக்கால் நிலங்களிலும், களிமண் இல்லாத மணல் பாங்கான தோட்டக்கால் நிலங்களிலும் எலுமிச்சை செழித்து வளரும்.
ஜூலை முதல் டிசம்பர் வரை நடவேண்டும். நாற்றுக்கு 5 மீட்டர் சுற்றளவில் இடைவெளி வேண்டும். அவ்வாறு செய்தால் ஓர் ஏக்கருக்கு 160 செடிகள் நடலாம். நோய்த் தடுப்பு செய்த எலுமிச்சை நாற்றுகளை நடவேண்டும்.
குழி வெட்டுதல், நீர்ப்பாசனம்: 75 செ.மீ. சுற்றளவு இருக்கும் வகையில் குழி தோண்ட வேண்டும். நன்கு வளரும்வரை நீர்ப் பாய்ச்ச வேண்டும். 7 முதல் 10 நாளில் நீர்ப் பாய்ச்சினால் போதும். வேர் பாகத்தில் நீர் தேங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
உரமிடுதல்: தழைச்சத்து 2 பிரிவாக மார்ச், அக்டோபர் மாதங்களில் இடவேண்டும். தொழுஉரத்தை முதல் ஆண்டுக்கு 10 கிலோ, ஆண்டுதோறும் 5 கிலோ வீதத்தில் இடுதல் வேண்டும். 
தழைச்சத்து முதல் ஆண்டு 200 கிராம் இட வேண்டும். அடுத்த ஆண்டு 100 கிராம் என்ற அளவில் சேர்த்து இட வேண்டும். மணிச்சத்து, சாம்பல் சத்தை ஆண்டுக்கு 100 கிராம் என்ற அளவிலும், ஆண்டுதோறும் 40 கிராம் வரை கூடுதலாகவும் சேர்த்து இட வேண்டும். 
உரமிடும்போது மரத்திலிருந்து 70 செ.மீ. தள்ளி மண்ணில் இட்டு கொத்திவிட வேண்டும். புதிய துளிர் வரும்போது துத்தநாக சல்பேட் 100 லிட்டர் நீருக்கு 500 கிராம் கலந்து, அக்கரைசலை மார்ச், ஜூலை, அக்டோபரில் தெளிக்க வேண்டும்.
செடியை 45 செ.மீ. உயரம் வரை கிளைகள் இன்றி நேராக வளரவிட வேண்டும். செடிக்கு 30 கிலோ பச்சை இலைகளை 3 மாதத்துக்கு ஒருமுறை இட வேண்டும்.
ஊடுபயிராக அவரைக் குடும்பத்தைச் சேர்ந்த பயிர்கள், காய் வகைகளை மரங்கள் காய்ப்புக்கு வரும் காலம் வரை கூடுதலாகப் பயிரிட்டு பயன்பெறலாம். 
பயிர் வளர்ச்சி ஊக்கி: காய் பிடிப்பை அதிகப்படுத்த 2.4 டி மருந்தை பி.பி.எம். 20 மில்லி லிட்டர் அளவில் தெளிக்க வேண்டும். பிஞ்சுகள் உதிர்வதைத் தடுக்க 20 பி.பி.எம். 2.4 டி அல்லது என்.ஏ.ஏ. 30 பி.பி.எம். என்ற மருந்தை 30 மில்லி கிராம் அளவில் தெளிக்க வேண்டும்.
பயிர்ப் பாதுகாப்பு: எலுமிச்சை மரத்தை இலைத் துளைப்பான், சாறு உறிஞ்சும் பூச்சி, பழ அந்துப் பூச்சி, குருத்து துளைப்பான், தண்டு துளைப்பான், பழஈ, நூற்புழு ஆகியவை தாக்கும். இலைத் துளைப்பானைக் கட்டுப்படுத்த, மானோகுரோட்டோபாஸ் 1 லிட்டர் தண்ணீருக்கு 15 மில்லி அளவில் கலந்து தெளிக்க வேண்டும். அல்லது, வேப்பங்கொட்டை பிண்ணாக்கு திரவத்தைப் பயன்படுத்தலாம். 
சாறு உறிஞ்சும் பூச்சியைக் கட்டுப்படுத்த வெள்ளை ஈக்கு குயினைல்பாஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி அளவு கலந்தும், கறுப்பு ஈயைக் கட்டுப்படுத்த மானோகுரோட்டோபாஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2.5 மில்லி கிராம் கலந்தும், அசுவினி பூச்சிக்கு மானோகுரோட்டோபாஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 மில்லி கிராம் கலந்தும், சிகப்புச் சிலந்தி பூச்சிக்கு நனையும் கந்தகத் தூளை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் அளவில் கலந்தும், குருத்துத் துளைப்பானைக் கட்டுப்படுத்த மானோகுரோட்டோபாஸ் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு மில்லி லிட்டர் என்ற அளவில் கலந்தும் தெளிக்க வேண்டும்.
பழ அந்துப் பூச்சியைக் கட்டுப்படுத்த பாத்திகளில் உள்ள டினோஸ்போரா களைகளை அகற்ற வேண்டும். பழங்களை பாலிதீன் பைகளால் மூட வேண்டும். தண்டு துளைப்பான் புழு தாக்கப்பட்ட கிளைகளைக் கவாத்து செய்ய வேண்டும். மாதத்துக்கு ஒருமுறை ஊசி மூலம் மானோகுரோட்டோபாஸ் 10 மில்லி அளவில் பூச்சி துளைத்த இடத்தில் செலுத்தி களிமண் கொண்டு மூடவும். நூற்புழு பாதித்த ஒரு மரத்தை கார்போபியூரான் 3ஜி 750 கிராம் அளவுக்கு இட்டு இப்பூச்சிகளைக் கட்டுப் படுத்த வேண்டும்.
இந்த முறைகளைக் கடைபிடித்து சாகுபடி செய்தால் எலுமிச்சை நடவு செய்த மூன்றாம் ஆண்டு முதல் டிசம்பர் } பிப்ரவரி, ஜூன்} செப்டம்பர் மாதங்களிலிருந்து அறுவடை செய்யலாம் என தோட்டக் கலைத் துறை ஆலோசனை வழங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com