குறுவை சாகுபடியில் கூடுதல் மகசூல் பெற...

நெல் குறுவை சாகுபடி விவசாயிகள் கூடுதல் மகசூல் பெறுவது குறித்து, நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ராஜா. ரமேஷ், ஆ. பாஸ்கரன் ஆகியோர் வழங்கியுள்ள்
குறுவை சாகுபடியில் கூடுதல் மகசூல் பெற...

நீடாமங்கலம்: நெல் குறுவை சாகுபடி விவசாயிகள் கூடுதல் மகசூல் பெறுவது குறித்து, நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ராஜா. ரமேஷ், ஆ. பாஸ்கரன் ஆகியோர் வழங்கியுள்ள் தொழில்நுட்ப ஆலோசனைகள்:
 நடவு வயல் தயாரிப்பு:
 நிலத்தை 2 மற்றும் 3 தடவை உழுதுவிடுவதால் மண்ணில் நீர்ப்பிடிப்புத் தன்மையை அதிகரிக்கச் செய்து பயிருக்குத் தேவைப்படும் நீர்த் தேவையை குறைக்கலாம். மேலும், களைகள் கட்டுப்படுத்தப்படுவதுடன், மண்ணிலுள்ள பூச்சிகளின் கூண்டுப் புழுப் பருவம் மற்றும் நோய்க் கிருமிகள் அழிக்கப்படுகின்றன. கடைசி உழவுக்கு முன்பாக ஒரு ஏக்கருக்கு 5 டன் மக்கிய தொழு உரம் அல்லது 2.5 டன் பசுந்தாள் உரத்தை போட்டு மண்ணுடன் நன்கு கலக்க வேண்டும்.
 கடைசி உழவின்போது 200 கிலோ ஜிப்சத்தை போட்டு நன்றாக மண்ணுடன் கலந்து சமன் செய்ய வேண்டும். பிறகு 10 கிலோ துத்தநாக சல்பேட் அல்லது 5 கிலோ தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நெல் நுண்ணூட்டக் கலவையை 20 கிலோ மணலுடன் கலந்து சீராக தூவ வேண்டும். மேலும், தலா 4 பாக்கெட் அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா உயிர் உரங்களை 10 கிலோ தொழு உரத்துடன் கலந்து சீராக தூவ வேண்டும்.
 உரமிடுதல்: மண் பரிசோதனை செய்து அதன்படி உரமிட வேண்டும் அல்லது பொதுப் பரிந்துரைப்படி ஏக்கருக்கு 50 : 20 :20 என்ற அளவில் தழை, மணி மற்றும் சாம்பல் சத்து உரங்களை இடவேண்டும் அதாவது 109, 125 மற்றும் 34 கிலோ யூரியா, சூப்பர் பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் உரங்களை இடவேண்டும்.
 தழைச்சத்து: தலா 27 கிலோ யூரியாவை மேலுரமாக நடவு நட்ட 15, 30 மற்றும் 45-ஆம் நாள்களில் போட வேண்டும். யூரியாவுடன் ஜிப்சம் மற்றும் வேப்பம் புண்ணாக்கை 5 :4 :1 என்ற விகிதத்தில் கலந்து போட வேண்டும். அப்போதுதான் யூரியாவிலுள்ள தழைச்சத்து உடனடியாக கிரகிக்கப்பட்டு பூக்கள் மலர்ந்து கருவுற்று அதிக எடையுடன் கூடிய நெல் மணியாக மாறி அதிக விளைச்சலுக்கு வழிவகுக்கும். கடைசியாக இடப்படும் யூரியா மட்டும் தனியாக போடவேண்டும்.
 மணிச்சத்து: 125 கிலோ சூப்பர் பாஸ்பேட் உரத்தினை முழுவதுமாக அடியுரமாக போட வேண்டும்.
 சாம்பல் சத்து: 17 கிலோ பொட்டாஷ் உரத்தை அடியுரமாகவும், மீதமுள்ள 17 கிலோ பொட்டாஷ் உரத்தை நடவு நட்ட 30 நாளில் போட வேண்டும்.
 களை நிர்வாகம்: நாற்று நட்ட 3-ஆம் நாள் ஏக்கருக்கு 1 லிட்டர் பூட்டாகுளோர் அல்லது பிரிட்டிலாகுளோர் அல்லது 45 கிராம் ஆக்ஸிடயர்ஜில் அல்லது 4 கிலோ பென்சல்ப்யூரான் மீதைல் ரூபிரிட்டிலாகுளோர் மருந்துகளில் ஏதாவது ஒரு களைக் கொல்லியை 10 கிலோ மணலுடன் கலந்து சீராக தூவி களைகளை கட்டுப்படுத்த வேண்டும். நாற்று நட்ட 15-20 நாள்களுக்குள் 100 மில்லி பிஸ்பைரிபேக் சோடியம் அல்லது 30 கிராம் அசிம்சல்ப்யூரான் அல்லது 600 கிராம் 2,4 டி சோடியம் இவற்றுள் ஏதாவது ஒரு மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கட்டுப்படுத்தலாம். களைக் கொல்லி இடும்போது வயலில் சிலிர்ப்பு நீர் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். பின்பு 2-3 நாள்களுக்கு நீரை வடிய வைக்கக் கூடாது.
 நீர் நிர்வாகம்: நெல் வயலில் தொடர்ந்து தண்ணீர் தேங்குவதை தவிர்த்து காய்ச்சலும் பாய்ச்சலுமாக நீர் பாய்ச்ச வேண்டும். இதனால், 30 முதல் 40 சதவீதம் தண்ணீர் சேமிக்கப்படுகிறது. நெல் பயிரின் மிக முக்கிய நீர்த் தேவை பருவங்களான தூர் பிடிக்கும் பருவம், பூக்கும் பருவம், கதிர் உருவாகும் பருவம் மற்றும் பால் பிடிக்கும் பருவங்களில் போதுமான அளவு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அறுவடைக்கு 10 நாள்களுக்கு முன்பு தண்ணீர் பாய்ச்சுவதை நிறுத்திவிட வேண்டும்.
 இலைவழி ஊட்டச்சத்து:
 யூரியா 1 சதம் (2 கிலோ ஏக்கருக்கு) , டிஏபி 2 சதம் (4 கிலோ) மற்றும் பொட்டாஷ் 1 சதம் (2 கிலோ) கலவையை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கதிர் உருவாகும்போது ஒரு முறையும் பின்பு 10 நாள்கள் கழித்து ஒரு முறையும் தெளிப்பதனால் நெல் மகசூல் அதிகரிக்கும். எனவே, குறுவை விவசாயிகள் மேற்குறிப்பிட்ட தொழில்நுட்ப முறையை பின்பற்றி கூடுதல் மகசூல் பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com