கொய்யா சாகுபடியில் நோய் தடுப்பு வழிமுறைகள்!

கொய்யா சாகுபடியில் நோய் தடுப்பு வழிமுறைகள்!

தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக சாகுபடி செய்யப்படும் கொய்யாவில், வெள்ளை ஈ, மாவுப்பூச்சி, செதில் பூச்சி போன்றவை பாதிப்பை உண்டாக்குகின்றன.

தருமபுரி: தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக சாகுபடி செய்யப்படும் கொய்யாவில், வெள்ளை ஈ, மாவுப்பூச்சி, செதில் பூச்சி போன்றவை பாதிப்பை உண்டாக்குகின்றன. இருப்பினும், இவற்றில் தேயிலை கொசு அதிக அளவில் பாதிப்பை உண்டாக்குகிறது. இதனைக் கட்டுப்படுத்தி, சாகுபடியில் ஏற்படும் இழப்பைத் தவிர்க்க, மேற்கொள்ள வேண்டிய நோய் மேலாண்மை குறித்து, தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர்கள் பா.ச.சண்முகம், க.இந்துமதி ஆகியோர் கூறும் வழிமுறைகளாவன:
கொய்யா சாகுபடியில் தேயிலை கொசுவினால் 30 - 40 சதவீதம் வரை விளைச்சல் இழப்பு ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், காய்களில் தோன்றும் கொப்பளங்களால் சந்தைக்கு உகந்தது இல்லாமல் ஆகி விடுகிறது. தேயிலை கொசு கொய்யா மட்டுமல்லாமல், முந்திரி, கோகோ, திராட்சை, முருங்கை, இலவம் பஞ்சு, மிளகு, புளியமரம் மற்றும் வேம்பு ஆகியவற்றிலும் பாதிப்பை உண்டாக்கக் கூடியது.
தேயிலை கொசுவின் இளம் குஞ்சுகள் மற்றும் வளர்ந்த பூச்சிகள் இளம் இலைகள், இளம் தண்டுகள் மற்றும் காய்களில் இருந்து சாறை உறிஞ்சுகின்றன. சாறை உறிஞ்சிய இடங்களில் இருந்து பிசின் போன்ற திரவம் வடியும். இலைகள் மற்றும் தண்டுப் பகுதி பாதிப்புக்குள்ளானால் பழுப்பு நிறமாக மாறிவிடும். பாதிக்கப்பட்ட காய்களில் கொப்பளங்கள் தோன்றும். அதிகம் பாதிக்கப்பட்ட காய்கள் மரங்களில் இருந்து கிழே விழுந்துவிடும்.
தேயிலை கொசுவின் வளர்ந்த பூச்சிகள் சிகப்பு, கருமை மற்றும் வெண்மை கலந்த நிறத்தில் காணப்படும். இப் பூச்சிகளின் கால்கள் மற்றும் உணர் கொம்புகள் நீளமாக காணப்படும். முட்டையிலிருந்து வெளிவரும் இளம் குஞ்சுகள் எறும்பு போன்று வெளிர் பழுப்பு நிறத்தில் காணப்படும். இவை சுமார் 10 நாள்களில் வளர்ந்த பூச்சிகளாக மாறும். தேயிலை கொசுவின் வாழ்நாள் 22 - 25 நாள்கள் வரை இருக்கும். ஐனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை இதன் தாக்குதல் காணப்படும்.
இதனைக் கட்டுப்படுத்த விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள்: மரங்களை சரியான காலத்தில் கவாத்து செய்தல் வேண்டும். இதனால், சூரிய வெளிச்சம் சரியான முறையில் ஊடுருவுவதால், தேயிலை கொசுவின் பாதிப்பு குறைவாக இருக்கும்.
மஞ்சள் வண்ண அட்டை பொறிகளை ஏக்கருக்கு 40 என்கிற அளவில் வைக்க வேண்டும். இதன் மூலம் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம். பவிரியா பூஞ்சாணத்தை 2கி/லி என்கிறளவில் ஒட்டு திரவத்தைக் கலந்து தெளிப்பதன் மூலம் பாதிப்பைக் குறைக்கலாம்.
வேப்பம் எண்ணெய் 3 சதம் (அ) புங்கம் எண்ணெய் 3 சதம் (அ) வேப்பங்கொட்டை கரைசல் 5 சதம் (அ) நிம்பிசிடின் 1500 பிபிஎம் 3 மிலி/ லி தெளிப்பதன் மூலம் பாதிப்பைக் கட்டுப்படுத்தலாம். பாதிப்பு அதிகமாக இருக்கும்போது, தயோமீத்தாக்சாம் 0.5 கிராம் / லிட்டர் (அ), இமிடாகுளோபிட்ல்ட் 0.5 மி லி / லிட்டர் (அ) தயோகுளோபிட்ல்ட் 1 மி லி / லிட்டர் (அ) டைமெத்தோயேட் 2 மி லி / லிட்டர் ஆகிய பூச்சிகொல்லி மருந்துகளில் ஏதாவது ஒன்றை உபயோகித்து நோய் பாதிப்பைக் கட்டுப்படுத்தலாம். எனவே, இந்த வழிமுறைகளைக் கடைப்பிடித்து கொய்யாவில் இழப்பைத் தவிர்த்து கூடுதல் சாகுபடி பெற்று விவசாயிகள் பயனடையலாம் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com