நெல் தரிசில் பயறு வகைகள் சாகுபடி தொழில்நுட்பங்கள்!

நெல் தரிசில் பயறுவகை பயிர்கள் சாகுபடி மற்றும் பயிர்ப் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் குறித்து, திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் ராஜா.ரமேஷ் கூறும்
நெல் தரிசில் பயறு வகைகள் சாகுபடி தொழில்நுட்பங்கள்!

நீடாமங்கலம்: நெல் தரிசில் பயறுவகை பயிர்கள் சாகுபடி மற்றும் பயிர்ப் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் குறித்து, திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் ராஜா.ரமேஷ் கூறும் வழிமுறைகள்:
காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் சம்பா மற்றும் தாளடி நெல் அறுவடைக்கு முன்பாக மெழுகுபத ஈரபதத்தில் பயறு வகை பயிர்களின் விதைகள் விதைக்கப்பட்டு, சாகுபடி செய்யப்படுகிறது. இதற்கு அல்லது தொடர் பயிர்கள் என்று பெயர். 
நெல் தரிசில் வயலிலுள்ள ஈரப்பதம் மற்றும் ஊட்டச் சத்துக்களை பயன்படுத்தி சாகுபடி செய்யப்படுவதால், அதிக செலவின்றி விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.
தற்போதைய புள்ளி விவரப்படி, தமிழ்நாட்டில் சுமார் 5.94 லட்சம் ஹெக்டேரில் பயறு வகைப் பயறுகள் சாகுபடி செய்யப்பட்டு, சுமார் 3.10 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், தமிழகத்தின் பயறுவகைத் தேவையானது 7 லட்சம் டன்கள் எனவும், 3.9 லட்சம் டன்கள் பற்றாக்குறை எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா பாசனப் பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் திருச்சி மாவட்டங்களில் 1.46 லட்சம் ஹெக்டேர்களில் உளுந்து மற்றும் பச்சைப் பயறானது நெல் தரிசில் பயிரிடப்பட்டு 32,000 டன்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.
பயறுவகைப் பயிர்களின் சராசரி உற்பத்தித் திறனானது இந்திய அளவில் ஹெக்டேருக்கு 623 கிலோ என்ற அளவிலும், தமிழ்நாட்டில் 516 கிலோ மட்டுமே கிடைக்கப்பெறுகிறது.
எனவே, கீழ்கண்ட முறைகளைப் பின்பற்றினால் அதிக விளைச்சல் பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகமாகும்.
அதிக விளைச்சல் பெறுவதற்கான சாகுபடி தொழில்நுட்பங்கள்
மண் வகை: களிமண் கலந்த இருமண்பாடு கொண்ட நிலங்கள் மிகவும் உகந்தவை. பச்சைப் பயறானது களர் மற்றும் உவர் நிலங்களிலும் நன்கு வளரும்.
ரகங்கள்: உளுந்து ரகங்களான ஏடிடீ 3, ஏடிடீ 5, ஏடிடீ 6, டி.எம்.வி 1 மற்றும் கோ 4 பச்சைப் பயறு ரகங்களான ஏடிடீ 3, கே.எம். 2 ஆகியவற்றை சாகுபடி செய்யலாம். தரமான சான்று பெற்ற விதைகளை தேர்வு செய்ய வேண்டும்.
பட்டம்: தைப்பட்டம் மிகவும் ஏற்ற பருவமாகும். ஏனெனில் அந்த சமயத்தில் வயலில் காணப்படும் ஈரப்பதம் மற்றும் பனி ஈரமும் பயிர்கள் வளர்வதற்கு உற்ற துணைபுரியும்.
விதையளவு: ஓர் ஏக்கருக்கு 10 கிலோ விதை போதுமானதாகும். இயந்திரம் மூலம் அறுவடை செய்யப்படும் இடங்களில் 12 கிலோ விதையளவைப் பயன்படுத்த வேண்டும். சங்கிலி வடிவ இயந்திரம் மூலம் நெல் அறுவடை செய்யும் இடங்களில் பயிர்கள் நன்கு வளரும்.
விதை நேர்த்தி: ஆறியஅரிசிக் கஞ்சியில் ஓர் ஏக்கருக்கு தேவைப்படும் 10 கிலோ விதையுடன் ஒரு பாக்கெட் ரைசோபியம் (200 கிராம்), ஒரு பாக்கெட் பாஸ்போபாக்டீரியா (200 கிராம்) ஆகிய உயிர் உரங்கள் மற்றும் 100 கிராம் சூடோமோனாஸ் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். பின்பு அதனை 15 நிமிடங்கள் நிழலில் உலர்த்தி 24 மணி நேரத்திற்குள் விதைப்பு செய்ய வேண்டும்.
விதைப்பு: சம்பா மற்றும் தாளடி நெல் அறுவடையானது ஆட்கள் மூலம் மேற்கொள்ளப்படும் இடங்களில் அறுவடைக்கு 7 முதல் 10 நாள்களுக்கு முன்பாகவும், இயந்திரம் மூலம் அறுவடை செய்யப்படும் இடங்களில் 4 முதல் 6 நாள்களுக்கு முன்பாகவும் மெழுகுபத ஈரபதத்தில் விதைகள் விதைக்கப்பட வேண்டும். மெழுகு பதம் இல்லையெனில் நீர்ப்பாசனம் செய்து, மெழுகு பதம் வந்த பின்பு விதைகளை தெளிக்க வேண்டும்.
பயிர்களின் எண்ணிக்கை: ஒரு சதுர மீட்டரில் 33 செடிகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். விதைகள் முளைக்காத இடங்களில் முளை கண்ட விதைகளை மீண்டும் தெளித்து சரியான பயிர் எண்ணிக்கையைப் பராமரிக்க வேண்டும்.
2 சதவீத கரைசல் தயாரிக்கும் முறை: ஒரு ஏக்கருக்குத் தேவைப்படும் 4 கிலோ டிஏபியை 10 லிட்டர் தண்ணீரில் முதல் நாள் இரவு கலந்து ஊறவைத்து, மறுநாள் காலை தெளிந்த கரைசலை மட்டும் எடுத்து அதனுடன் 2 கிலோ பொட்டாசியம் குளோரைடு மற்றும் 160 மிலி பிளானோபிக்ஸ் வளர்ச்சி ஊக்கி மருந்தை கலந்து தேவையான அளவு தண்ணீர் கலந்து 200 லிட்டர் கரைசல் தயாரித்து தெளிக்க வேண்டும்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பயறு ஊட்டச்சத்து டானிக்: ஒரு ஏக்கருக்குத் தேவைப்படும் 2 கிலோ பயறு ஒண்டர் மருந்தை தேவையான அளவு ஒட்டும் திரவத்துடன் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து பூக்கும் தருணத்தில், தெளிப்பதனால் வறட்சியை தாங்கி காய்கள் அதிகம் பிடித்து விளைச்சலானது 20-25 சதவீதம் வரை அதிகரிக்க வழிவகுக்கும்.
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு: சாறு உறிஞ்சும் பூச்சிகளிகளான அசுவினி, வெள்ளை ஈ, தத்துப்பூச்சி மற்றும் இலைச் சிலந்தி ஆகியவற்றின் தாக்குதலைக் கட்டுப்படுத்த 3 சதவீத வேப்பெண்ணெய் கரைசல் அல்லது 5 சதவீத வேப்பம் பருப்பு கரைசல் தெளித்து கட்டுப்படுத்தலாம் அல்லது ஒரு ஏக்கருக்கு டைமெத்தோயேட் 30 ஈசி 200 மிலி மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை வேளைகளில் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
பச்சைக் காய்ப்புழுவானது காய்களைத் துளைத்து, பருப்பைத் தின்றும், காய்ப்புழு பூ மற்றும் மொட்டுகளைத் துளைத்து தின்றும் மற்றும் புகையிலை இலைவெட்டுப்புழுவானது இலைகளை தாக்கி பெரும் சேதத்தை உண்டாக்கும். இவற்றைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு 5 இனக்கவர்ச்சிப் பொறிகளை வைத்து ஆண் அந்துப் பூச்சிகளையும், 1 விளக்குப் பொறியை வைத்து தாய் அந்துப் பூச்சிகளையும் கவர்ந்து அழிக்கலாம். இதன் தாக்குதல் பொருளாதார சேதநிலையை தாண்டினால் தயோடிகார்ப் 75 டயிள்யூ.பி. 250 மிலி அல்லது குளோர்பைரிபாஸ் 20 ஈசி 500 மிலி அல்லது டைகுளோர்வாஸ் 76 ஈ.சி 400 மிலி இவற்றில் ஏதேனும் ஒரு மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை வேளைகளில் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
அறுவடை: 80 சதவீதத்துக்கும் அதிகமான காய்கள் முதிர்ச்சியடைந்தவுடன் செடிகளை தரை மட்டத்திற்கு சற்று மேலே வெட்டி அறுவடை செய்ய வேண்டும். அதனால் மண்ணிலிருக்கும் வளத்தை பெருக்க உதவிடும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com