வெண்டை சாகுபடியில் அதிக மகசூல் பெற...

வெண்டை சாகுபடியில் தகுந்த தொழில்நுட் பங்களை கடைப்பிடிப்பதன் மூலம் அதிக மகசூல் பெறலாம் என தோட்டக்கலைத்துறை அறிவுறுத்தியுள்ளது.
வெண்டை சாகுபடியில் அதிக மகசூல் பெற...

திருச்சி: வெண்டை சாகுபடியில் தகுந்த தொழில்நுட் பங்களை கடைப்பிடிப்பதன் மூலம் அதிக மகசூல் பெறலாம் என தோட்டக்கலைத்துறை அறிவுறுத்தியுள்ளது.
ரகங்கள்: கோ 2. எம்டியு 1, அர்கா அனாமிகா, அர்கா அபஹாப், பார்பானி கிராந்தி, கோ 3, பூசா சவானி மற்றும் வர்சா உப்கார்.
தட்பவெப்பநிலை: வெப்பத்தை விரும்பும் பயிராக வெண்டை உள்ளது. நீண்ட நேர வெப்ப நாள்கள் இதற்குத் தேவை. பனி மூட்டங்களால் இதன் வளர்ச்சி பாதிக்கப்படும். குளிர் காலத்திலும், குளிர் பிரதேசங்களிலும் வெண்டை நல்ல முறையில் வளராது. வெண்டையை எல்லா வகை மண் வகையிலும் பயிரிடலாம். நல்ல உரச்சத்துள்ள மண்களில் மிகவும் நன்றாக வளரும். கார அமில நிலையை ஓரளவு தாங்கி வளரும்.
பருவம்: ஜூன்- ஆகஸ்ட் மற்றும் பிப்ரவரி, மார்ச்.
விதையளவு: ஹெக்டேருக்கு 7.5 கிலோ போதுமானது.
நிலம் தயாரித்தல்: மூன்று முதல் நான்கு முறை நிலத்தை உழவேண்டும். கடைசி உழவுக்கு முன்பு 25 டன் தொழு உரம் இட்டு, 45 செ.மீ இடைவெளி விட்டு வரிப்பாத்திகள் (பார்சால்) அமைக்கவேண்டும்.
விதைநேர்த்தி: விதைகளை விதைப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பு ஒரு கிலோவுக்கு 2 கிராம் கேப்டான் அல்லது திராம் கொண்டு நேர்த்தி செய்யவேண்டும். பின்பு விதைகளை 400 கிராம் அசோஸ்பைரில்லம் கலவையுடன் கலந்து விதைக்கவேண்டும். நிழலில் ஆறவைத்த அரிசிக் கஞ்சியுடன் அசோஸ்பைரில்லம் தூளை நன்கு கலக்கவேண்டும். பிறகு இந்தக் கலவையில் வெண்டை விதையை நன்கு கலந்து அரை மணி நேரம் உலர வைக்கவேண்டும். இவ்வாறு நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை வரியில் 30 செ.மீ இடைவெளியில் 2 விதைகள் என்ற விகிதத்தில் 2 செ.மீ ஆழத்தில் ஊன்றவேண்டும். 10 நாள்களுக்குப் பிறகு 2 செடிகளை விட்டு மீதம் உள்ளவற்றை களைதல்வேண்டும்.
நீர் நிர்வாகம்: நட்டவுடன் நீர்ப் பாய்ச்சவேண்டும். பிறகு வாரத்துக்கு ஒரு முறை நீர்ப் பாய்ச்ச வேண்டும்.
உரமிடுதல்: அடியுரமாக 20 கிலோ தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்து மற்றும் 30 கிலோ சாம்பல் சத்து வரிகளில் ஒரு பக்கத்தில் இட்டு மண்ணுடன் நன்கு கலந்துவிடவேண்டும். நட்ட 30 நாள் கழித்து மேலுரமாக 20 கிலோ தழைச்சத்து இடவேண்டும். 2 கிலோ அசோஸ்பைரில்லம் அல்லது பாஸ்போ பாக்டீரியம் நுண்ணுயிர் கலவையை 20 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து நேரடியாக மண்ணில் இட்டு, தழைச்சத்தின் தேவையை குறைத்துக் கொள்ளலாம். மேல் உரம் இட்டு மண் அணைத்து தண்ணீர் கட்டுவது அவசியமாகும்.
இலைவழி ஊட்டம்: ஒரு சத யூரியா கரைசலை விதைத்து 30 நாள்கள் கழித்து 10 நாள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்கவேண்டும். மீயூரேட் ஆப் பொட்டாஷ் 17 கிராம் ஒரு லிட்டர் நீரில் கரைத்து விதைத்த 30, 45, 60ஆவது நாளில் தெளிப்பதன் மூலம், விளைச்சலை அதிகப்படுத்தலாம்.
களை நிர்வாகம்: களைகள் முளைக்கும் முன் விதைத்த மூன்றாம் நாள் ஹெக்டேருக்கு ப்ளுக்குளோரலின் 2 லிட்டர் தெளித்து உடன் நீர்ப் பாய்ச்சவேண்டும். பிறகு விதைத்த 30ஆவது நாள், ஒரு கைக்களை எடுக்கவேண்டும்.
காய்த் துளைப்பான்: வெண்டையில் காய்த்துளைப்பான் தாக்குதல் அதிகமாகக் காணப்படும். இவற்றை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த தடுப்பு முறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம்.
இனக்கவர்ச்சிப் பொறியை ஹெக்டேருக்கு 12 என்ற எண்ணிக்கையில் வைக்கவேண்டும். காய்ப் புழுக்களால் தாக்கப்பட்ட காய்களை சேகரித்து அழித்துவிடவேண்டும். முட்டை ஒட்டுண்ணியான ட்ரைக்கோகிரம்மா ஒரு லட்சம் என்ற எண்ணிக்கையில் விடவேண்டும். கார்பரில் நனையும் தூள் 2 கிராமை ஒரு லிட்டர் நீரில் கரைத்து தெளிக்கவேண்டும் இவற்றுடன் ஒரு லிட்டர் நீர் கலந்து தெளிக்கவேண்டும். அல்லது வேப்பம் கொட்டைப் பொடி 50 கிராமை ஒரு லிட்டர் நீரில கரைத்து தெளிக்கவேண்டும்.
சாம்பல் நிற வண்டு: இதனைக் கட்டுப்படுத்த கார்போபியூரான் 3 ஜி. குருணை மருந்தை ஹெக்டேருக்கு 12 கிலோ அளவில் இடவேண்டும். நூற்புழு தாக்குதலைத் தடுக்க ஹெக்டருக்கு 400 கிலோ வேப்பம் புண்ணாக்கை விதைக்கும் போது, உரத்துடன் கலந்து இடவேண்டும் அல்லது ஒரு ஹெக்டேருக்கு கார்போபியூரான் 3ஜி குருணை மருந்து ஒரு கிலோ அல்லது போரேட் 10ஜி குருணை மருந்து ஒரு கிலோ இடவேண்டும்.
அசுவினிப்பூச்சி: இதனைக் கட்டுப்படுத்த மீதைல் டெமட்டான் 25 இசி 2 மில்லி அல்லது டெமெத்தோயேட் 2 மில்லி மருந்து இவற்றுடன் ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கவேண்டும்.
மஞ்சள் நரம்புத் தேமல் நோய்: இது மிகவும் அதிக அளவில் வெண்டையைத் தாக்கக் கூடிய நச்சுயிரி ஆகும். இந்நோய் வெள்ளை ஈ என்ற பூச்சிகளால் ஒரு செடியிலிருந்து மற்றொரு செடிக்கு பரப்பப்படுகிறது. இப்பூச்சியை முதலில் கட்டுப்படுத்த வேண்டும். இதற்கு 2 மில்லி வேம்பு எண்ணை மற்றும் ஒரு லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்கவேண்டும். கோடை காலத்தில் இந்நோய் மிக அதிக அளவில் வெண்டையைத் தாக்கும். இந்தப் பருவத்தில் நோயை எதிர்த்து வளரக் கூடிய பார்பானி கிராந்தி போன்ற இரகங்களைப் பயிரிடுவது நல்லது. மேலும் இந்நோயைத் தாங்கி வளரக் கூடிய இரகங்காளன பார்பானி கிராந்தி, அர்கா அனாமிகா மற்றும் அர்கா அபஹாப் போன்றவற்றை சாகுபடி செய்யவேண்டும்.
சாம்பல் நோய்: இந்நோயின் அறிகுறிகள் தென்பட்டவுடன் நனையும் கந்தகத்தூள் 2 கிராமை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவேண்டும். பிறகு 15 நாள் இடைவெளியில் மறுபடியும் ஒரு முறை தெளிக்கவேண்டும். பிறகு இடைவெளியில் மறுபடியும் தெளிக்கவெண்டும்.
அறுவடை: நட்ட 45 நாள்களில் காய்கள் அறுவடைக்கு வரும். காய்கள் முற்றுவதற்கு முன் அறுவடை செய்து விடவேண்டும். முதல் 2 நாள்களுக்கு ஒரு முறை அறுவடை செய்வது முக்கியமாகும். ஹெக்டேருக்கு 90 முதல் 100 நாள்களில் 12 முதல் 15 டன் காய்கள் கிடைக்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com