மாம்பழச் சாகுபடி: புழுக்களை கட்டுப்படுத்துவது எப்படி?

தற்போது மாமரங்களில் பூப்பிடிக்கும் பருவம் தொடங்கியுள்ளதால் பூங்கொத்து புழுக்களை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறையை விவசாயிகள் பின்பற்றுவது அவசியம்
திருவள்ளூரை அடுத்த கொப்பூரில் பூக்கும் பருவத்தில் பயிர்ப் பாதுகாப்பு செய்யப்பட்ட மாமரங்கள்.
திருவள்ளூரை அடுத்த கொப்பூரில் பூக்கும் பருவத்தில் பயிர்ப் பாதுகாப்பு செய்யப்பட்ட மாமரங்கள்.

திருவள்ளூர்: தற்போது மாமரங்களில் பூப்பிடிக்கும் பருவம் தொடங்கியுள்ளதால் பூங்கொத்து புழுக்களை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறையை விவசாயிகள் பின்பற்றுவது அவசியம் என தோட்டக்கலைத்துறை சார்பில் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. 
திருவள்ளூர் மாவட்டத்தில் 10,816 ஹெக்டேரில் மாம்பழ சாகுபடி நடைபெற்று வருகிறது. இதில், மா வகைகளான நீலம், பங்கனப்பள்ளி, அல்போன்சா மற்றும் இம்மாவட்டத்தின் சிறப்பு ரகமான சவ்வாரி மா வகைகளையும் விவசாயிகள் விளைவித்து வருகின்றனர். தற்போதைய நிலையில் மாமரங்களில் பூப் பிடிக்கும் பருவம் தொடங்கியுள்ளது. 
இந்த சமயத்தில் மாமரங்களில் பயிர்ப் பாதுகாப்பு செய்தால் மட்டுமே மகசூலை அதிகரிக்க முடியும். மேலும், பூப்பிடிக்கும் பருவம் என்பதால் தத்துப்பூச்சி, பூங்கொத்துப் புழு, இலைச்சுருட்டுப்புழு, தண்டு துளைப்பான், இலைப்புள்ளி போன்ற பல்வேறு பூச்சிகளின் தாக்குதல் அதிகமாக இருக்கும். இந்த பூச்சிகளால் நோய் தாக்கினால் மா மகசூல் குறையும். இதை தவிர்க்க விவசாயிகள் ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறையைப் பின்பற்ற வேண்டும். 
மா பயிர் பாதுகாப்பு: பூப்பிடிக்கும் பருவத்தில் எண்ணைய்ப் பசை போன்று பளபளப்பாக இருந்தால் பூங்கொத்துகளை தத்துப்பூச்சி தாக்கியுள்ளது என அறிந்து கொள்ளலாம். இதை நாம் உற்று நோக்கினால் கண்டுபிடித்துவிடலாம். இப்பூச்சிகள் மாவிலைக் குருத்துகள் மற்றும் பூங்கொத்துகளில் உள்ள சாறை உறிஞ்சிவிடும். இதனால் பூங்கொத்துகள் வலுவிழப்பதோடு பூ மொட்டுகள் மற்றும் பிஞ்சுகள் ஆகியவை உதிரும். இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் கவாத்து செய்து அதை அகற்றி மாமரத்தை பாதுகாக்க வேண்டும். 
பாதிப்பைக் கட்டுப்படுத்த... : இந்த நோயைக் கட்டுப்படுத்த பாசலோன் 35 இசி 1.5 மில்லி மருந்தை, ஒரு ஹெக்டேருக்கு ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து கிளைகள், தண்டுகள், மரத்தின் இலைகள் ஆகியவற்றில் தெளிப்பான் மூலம் நன்கு படத் தெளிக்க வேண்டும். இதை மாலை நேரங்களில் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். 
அதேபோல், கார்பரில் 50 சதவீதம் நனையும் கந்தகம் ஆகியவற்றை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். அதேபோல், பூப்பிடிக்கும் பருவம் என்பதால் பூங்கொத்துப் புழு தாக்குதலும் அதிகம் இருக்கும். இதை கட்டுப்படுத்த பாசலோன் 2 மில்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
தண்டு துளைப்பான் தாக்குதல்: இதேபோல் தண்டு துளைப்பான் நோய் தாக்குதல் இருந்தால் தரை மட்டம் முதல் 1 மீட்டர் உயரத்தில் மரப்பட்டையை 'ப' வடிவில் செதுக்கி, இடையில் பஞ்சை வைத்து மானோகுரோட்டாபாஸ் 10 மில்லி மருந்தை பஞ்சு நனையும் வரையில் தெளித்து, பின்பு பட்டையை மரத்தோடு பொருத்துவதோடு ஈரக்களிமண்ணால் மூட வேண்டும். 
அதேபோல், இலைப்புள்ளி தாக்குதல் இருந்தால் மாங்கோசெப் 2 கிராம் மருந்து ஒரு லிட்டர் தண்ணீர் அல்லது கார்பென்டாசிம் 1 கிராமுக்கு ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் அல்லது க்ளோராதலேனில் 2 கிராமுக்கு ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து பிஞ்சுப் பருவத்திலிருந்து அறுவடை செய்வதற்கு முன்பு வரையில் 20 நாள்களுக்கு ஒருமுறை தெளித்து வந்தால் அனைத்து மா வகைகளையும் பாதுகாக்கலாம். 
இதுபோன்ற ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறையைப் பின்பற்றி மா சாகுபடி யை விவசாயிகள் அதிகரிக்க வேண்டும் என தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் முத்துதுரை ஆலோசனைகளை வழங்கியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com