உயர் விளைச்சல் தரும் கம்பு!

மனித வாழ்வுக்கு முதன்மையான தேவை உணவாகும். இந்த உணவில் சிறுதானியங்களின் பங்கு மிக முக்கியமானது. மாறி வரும் உணவு பழக்கவழக்கங்களினாலும்
உயர் விளைச்சல் தரும் கம்பு!


பெரம்பலூர்: மனித வாழ்வுக்கு முதன்மையான தேவை உணவாகும். இந்த உணவில் சிறுதானியங்களின் பங்கு மிக முக்கியமானது. மாறி வரும் உணவு பழக்கவழக்கங்களினாலும், இன்றைய இயந்திர வாழ்க்கையின் துரித உணவினாலும் சிறுதானியங்களின் பங்களிப்பைக் குறைத்து வருகிறோம்.
இதனால், சிறுதானிய வகைகளான கேழ்வரகு, சாமை, கம்பு, வரகு போன்றவற்றால் நாம் பெற்றுவந்த சமச்சீர் உணவு மற்றும் ஊட்டத்தை இழந்துகொண்டு இருக்கிறோம். இவற்றில் அதிக வறட்சியைத் தாங்கி வளர்ந்து, மிக குறுகிய காலத்தில் குறைந்த சாகுபடி செலவில், அதிக வருமானம் தரக்கூடியது கம்பு சாகுபடியாகும். 
இதுகுறித்து பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள வேளாண் அறிவியல் மைய உழவியல் தொழில்நுட்ப வல்லுநர் மு. புனிதவதி கூறியது: 
இந்தியாவில் நெல், கோதுமை, சோளத்துக்கு அடுத்தபடியாக சுமார் 8 மில்லியன் ஹெக்டேரில் கம்பு பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் சுமார் 50,000 ஹெக்டேரில் பயிரிடப்படுகிறது. மழையளவு குறைவாக உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கம்பு சாகுபடி செய்யப்படுகிறது. இப்பயிர் வறட்சியான மற்றும் மண் வளம் குன்றிய இடங்களிலும் நன்கு செழித்து வளரும். இறவையில் சுமார் 5-7 பாசன நீர் போதுமானது. மானாவாரியிலும் இறவையிலும் நல்ல மகசூலைத் தரும். 
நிலம் தயாரிப்பு:நிலத்தை இரும்பு கலப்பையால் இரு முறையும், நாட்டுக் கலப்பையால் இரு முறையும் உழுது, கட்டிகளின்றி மண்ணை உடைக்க வேண்டும். மட்கிய தொழுஉரம் ஹெக்டேருக்கு 12 டன் என்கிற அளவில் இட்டு, நாட்டுக் கலப்பையால் மீண்டும் உழுது மண்ணுடன் உரத்தை நன்கு கலக்கச் செய்ய வேண்டும். 10 பொட்டலம் அசோஸ்பைரில்லம், 10 பொட்டலம் பாஸ்போபாக்டீரியாவை 25 கிலோ மண் மற்றும் 25 கிலோ தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும். 
பருவம் மற்றும் ரகங்கள்: கம்பு சாகுபடிக்கு முன்பு சிறந்த பருவம் மற்றும் உயர் விளைச்சல் ரகங்களைத் தேர்வுசெய்தல் மிக அவசியம். கம்பு பூக்கும் காலத்தில் அதிகமாக குளிர் வெப்பம் மற்றும் மழை இல்லாமல் இருக்க வேண்டும். பூக்கும் காலத்தில் இச்சூழ்நிலைகள் இருந்தால், மகரந்தம் அல்லது சூலகம் பாதிக்கப்பட்டு கருவுறுதல் தடைபடும். அதனால் விதைப்பிடிப்பும் குறையும். 
கதிர் முற்றிய தருவாயில் அதிக மழையோ அல்லது குறைந்த வெப்பமோ இருந்தால், தானிய மணிகள் பூசணத் தாக்குதலுக்குள்ளாகி விளைச்சலும், தரமும் குறையும். தமிழ்நாட்டில் பெரும்பாலும், கம்பு மானாவாரிப் பயிராக ஜுன், ஜுலை மாதங்களிலும், அதாவது ஆடிப்பட்டத்தில் பயிர் செய்யப்படுகிறது. கம்பு விதைகளில் சாதாரண ரகங்கள், வீரிய ஒட்டு ரகங்கள் என உற்பத்தி செய்யப்படுகின்றன. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் சிறுதானியத் துறையில் பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் உயர் விளைச்சலைத் தரவல்ல, புதிய ரகங்கள் உருவாக்கப்பட்டு உழவர்களுக்கு வழங்கப்படுகின்றன. இவற்றில் கோ-9, கோ-10 ஆகிய வீரிய ஒட்டு ரகங்கள் அதிகளவில் பயிர் செய்வதற்கு பரிந்துரை செய்யப்படுகின்றன. 
விதை நேர்த்தி செய்தல்: கம்பு விதைகளை 2 சதம் பொட்டாசியம் குளோரைடு அல்லது 3 சதம் சோடியம் குளோரைடில் 16 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு இந்த விதைகளை 5 மணி நேரம் நிழலில் உலர்த்த வேண்டும். இதனால், விதைகளின் முளைப்புத்திறன் அதிகரிக்கும். பார் மற்றும் வாய்க்கால் முறையில் நடவு செய்வதற்கு 5 கிலோ விதைகள் தேவைப்படும். விதைகளுக்கான இடைவெளி 4 - 5 செ.மீ இருக்க வேண்டும். இவ்வாறு நட்டால் ஏக்கரில் 1,45,000 பயிர்கள் இருக்கும்.
உர அளவு: மண் பரிசோதனையின் பரிந்துரைப்படி தழை, மணி, சாம்பல் சத்துகளை அளிக்கலாம். அவ்வாறு செய்யாத நிலையில் ஹெக்டேருக்கு 70:35:35 என்ற அளவில் தழை, மணி, சாம்பல் சத்துகளை அளிக்க வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட தழைச்சத்தை மூன்றாகப் பிரித்து விதைக்கும் முன், விதைத்த 15 ஆம் நாள் மற்றும் விதைத்த 30 ஆம் நாளில் மண் வளத்தைப் பொறுத்து இட வேண்டும். மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்தை அடியுரமாக அளிக்க வேண்டும். 
களை மேலாண்மை:விதைத்த 3 நாள்களுக்குப் பிறகு களை முளைப்பதற்கு முன் ஹெக்டேருக்கு அட்ரசின் 0.25 கிலோ எடுத்து 500 லிட்டர் நீரில் கலந்து மண்ணின் மேற்பரப்பில் ரேப்சேக் அல்லது ராக்கர் தெளிப்பானால் தெளிக்க வேண்டும். மண்ணில் தேவையான அளவு ஈரப்பதம் இருக்கும்போதும், களை முளைப்பதற்கு முன்பும் களைக் கொல்லியைப் பயன்படுத்த வேண்டும். விதைத்த 30-35 நாள்களுக்குப் பிறகு கையால் களையெடுக்க வேண்டும்.
அறுவடை: 85 முதல் 90 நாள்களுக்குள் இலைகள் மஞ்சளாக மாறி உலர்ந்த தோற்றத்திலும், தானியங்கள் கடினமாகவும் இருந்தால் அறுவடை செய்யலாம். கதிர்களைத் தனியாக அறுக்க வேண்டும். தட்டைகளை ஒரு வாரம் காயவிட்டு அறுவடை செய்ய வேண்டும். கோ-10 ரகம் இறவையில் சராசரியாக ஒரு ஹெக்டேருக்கு 3.526 டன் விளைச்சலையும், மானாவாரியில் 2.923 டன் விளைச்சலையும் தரவல்லது. 
இதுமற்ற ரகங்களை விட அதிக விளைச்சலைத் தருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com