கர்நாடக காவல் துறையில் கன்னடத்தின் பயன்பாட்டை ஊக்குவிக்க உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கன்னட வளர்ச்சி ஆணையத்தின் தலைவர் எஸ்.ஜி.சித்தராமையா தெரிவித்தார்.
பெங்களூரு மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காவல் ஆணையர் பிரவீண்சூட் உள்ளிட்ட அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
மாநில அளவில் காவல் துறையில் கன்னட மொழியை ஊக்குவிக்க வேண்டும். எனவே, அத்துறையில் தொடர்ந்து கன்னட மொழியிலான கலாசார நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். மற்ற துறைகளை ஒப்பிடுகையில் காவல் துறையில் கன்னடத்தின் பயன்பாடு திருப்திகரமாக உள்ளது. காவலர்களுக்கு சிறந்த இலக்கியங்கள், எழுத்தாளர்களின் நூல்களை வாசிப்பதற்கான சூழலை ஏற்படுத்தித்தர வேண்டும். பெருகி வரும் தொழில்நுட்பங்களிலும் கன்னடத்தை புகுத்த வேண்டும். காவல் நிலையங்களில் ஆங்கிலத்தை குறைத்து, கன்னடத்தை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும். வெளிமாநிலங்கள் அல்லது மத்திய அரசுக்கு தரும் அறிக்கைகளை மட்டுமே ஆங்கிலத்தில் வழங்க வேண்டும். மாநிலத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் கன்னடத்தின் பயன்பாட்டை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்றார்.
பேட்டியின் போது, மாநகரக் காவல் ஆணையர் பிரவீண்சூட், இலக்கியவாதி சித்தலிங்கய்யா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.