கடந்த சில நாள்களாக சளி, இருமல் பிரச்னையால் அவதிப்பட்டு வந்த கர்நாடக முன்னாள் முதல்வரும், மதச் சார்பற்ற ஜனதா தளத் தலைவருமான குமாரசாமி சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உடல் நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, கடந்த புதன்கிழமை சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்ற குமாரசாமி, அங்குள்ள மெளன்ட் எலிசபெத் மருத்துவமனையில் பரிசோதனை செய்து சிகிச்சை பெற்று வருகிறார். கர்நாடகத்தில் அரசியல் சூழல் மாறி வரும் நிலையில், குமாரசாமி சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமாரசாமிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது மஜத கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தக் கூடும் என்பதால், சிங்கப்பூரில் சிகிச்சை பெறுவது குறித்து தாமதமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், சிங்கப்பூரிலிருந்து சனிக்கிழமை பெங்களூரு திரும்புவார் எனக் கூறப்படுகிறது.
சிங்கப்பூரில் சிகிச்சை பெறும் குமாரசாமியுடன் பேராசிரியர் ரங்கப்பா உடன் சென்றுள்ளார். குமாரசாமி முழு ஆரோக்கியத்துடன் நலமுடன் இருப்பதாக ரங்கப்பா தெரிவித்துள்ளார்.