இந்தியாவில் சுகாதாரச் சுற்றுலாவை மேம்படுத்துவது அவசியம் என்று புற்றுநோயியல், எலும்பு மஜ்ஜை வல்லுநர் சுனில்பட் தெரிவித்தார்.
பெங்களூரில் வெள்ளிக்கிழமை நாராயணா சுகாதார மையத்தின் சார்பில் நடைபெற்ற புற்றுநோய், எலும்பு மஜ்ஜை நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அவர் பேசியது: ஆசியாவில் சுகாதாரத் துறையில் சிறந்து விளங்கும் நாடாக இந்தியா விளங்குகிறது. ஆனால், நமது நாட்டை சுற்றியுள்ள அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான், மியான்மர் உள்ளிட்ட நாடுகள் சுகாதாரத் துறையில் மிகவும் பின்தங்கியுள்ளன. இதனால் அங்குள்ள மக்கள் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற இந்தியா வருவது அதிகரித்துள்ளது.
எனவே, சுகாதாரச் சுற்றுலாவை மேம்படுத்துவது அவசியம். அண்மையில் இலங்கையில் தலிசீமியா நோயால் பாதிக்கப்பட்ட 3 குழந்தைகளுக்கு பெங்களூரில் சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர்கள் முழுமையாக குணமடைந்துள்ளனர். நிகழாண்டில் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டினர் இந்தியாவில் சிகிச்சைப் பெறுவது அதிகரித்து வருகிறது என்றார்.