பெங்களூரு தமிழ்ச் சங்கம் சார்பில் டிச.13-ஆம் தேதி கர்நாடக மாநில உதய விழா நடத்தப்படுகிறது.
இதுகுறித்து பெங்களூரு தமிழ்ச் சங்கம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு 1956-இல் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அப்போது, ஹைதராபாத் நிஜாம், மும்பை மாகாணம், மெட்ராஸ் மாகாணம், மைசூர் உடையார் ஆட்சியின் கீழ் இருந்த கன்னடம் பேசும் பகுதிகளை இணைத்து மைசூர் மாநிலம் உருவாக்கப்பட்டது.
பின்னர் 1973-ஆம் ஆண்டில் மைசூர் மாநிலம், கர்நாடகம் என்ற பெயர் சூட்டப்பட்டது. 1956 நவ.1-ஆம் தேதி மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டதை ஆண்டுதோறும் கர்நாடகத்தில் மாநில உதயவிழாவாக(ராஜ்யோத்சவா) கொண்டாடப்பட்டுவருகிறது.
பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் சார்பில் 62-ஆவது கர்நாடக மாநில உதயவிழா பெங்களூரில் டிச.14-ஆம் தேதி காலை 11.30 மணிக்கு கொண்டாடப்படுகிறது. விழாவுக்கு சங்கத்தலைவர் தி.கோ.தாமோதரன் தலைமை வகிக்க, பெங்களூரு மாநகராட்சி மேயர் ஆர்.சம்பத்ராஜ் முன்னிலை வகிக்கிறார். சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர்கள் கே.ஜே.ஜார்ஜ், ரோஷன்பெய்க், மாநகராட்சி திட்டநிலைக்குழு உறுப்பினர் மம்தா சரவணா கலந்துகொள்கிறார்கள். பேராசிரியர் எஸ்.கே.சாந்தமூர்த்தி அறக்கட்டளை அமைப்பாளர் எஸ்.கே.சாந்தமூர்த்தி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கவிருக்கிறார்.
இவ்விழாவில் தமிழுக்கும், கன்னடத்திற்கும் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு கன்னடம்-தமிழ் நல்லுறவு உயர் விருதுகள் வழங்கபடுகிறது. இந்த ஆண்டுக்கான விருதினை, கர்நாடக அரசின் சந்தைப்படுத்தல் ஆலோசனை மற்றும்
முகமை (Marketing Consultants & Agencies) நிறுவனர் தலைவர் ரகுதேவராஜ், பெங்களூரு அரசு அருங்காட்சியகத்தின் இயக்குநர் ஆர்.கோபால், பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர் கே.தனபால் ஆகிய மூன்று பேருக்கு வழங்கப்படுகிறது.
நிகழ்ச்சியில் சங்கத்தின் காமராஜர் உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைப்பெறுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.