தனிமனித சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது என்று கன்னட மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் உமாஸ்ரீ தெரிவித்தார்.
பெங்களூரு கன்னட பவனில் வியாழக்கிழமை கன்னட இலக்கிய அகாதெமியின் 5 அம்ச திட்ட கலந்துரையாடல் நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் கலந்து கொண்டு அவர் பேசியது: அண்மைக் காலமாக தனிமனித சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. தனி மனித கருத்தை தெரிப்பவர்கள் மீது தாக்குதல், கொலை செய்வது உள்ளிட்டவை அதிகரித்து வருகின்றன. இதனை கண்டிக்காவிட்டால், எதிர்ப்புத் தெரிவிக்காவிட்டாலும், வரும் நாள்களில் நிலைமை மோசமாகிவிடும். எனவே, அண்மைக் காலமாக நாம் சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்து ஆலோசித்து, அதற்கான தீர்வை கண்டறிய வேண்டும் என்றார்.
இலக்கியவாதி பர்கூரு ராமசந்திரா பேசியது:
இளைஞர்கள் இலக்கியத்தில் ஆர்வமில்லாமல் உள்ளனர். புராணங்களை அறிந்து கொள்வதிலும், விருப்பமில்லாமல் உள்ளனர். அவர்களுக்கு இது தொடர்பான ஆர்வத்தை ஏற்படுத்துவது அவசியம். 5 அம்ச திட்டத்தில் தொடர்பாக விவாதிக்க வேண்டும்.
அண்மைக் காலமாக இலக்கியங்களில் மதமும், அரசியலும் ஆக்கிரமித்து வருகின்றன. இதனால் இலக்கிய நன்னெறிகள் வீழ்ச்சி அடைந்துள்ளன என்றார் அவர். நிகழ்ச்சியில் கன்னட இலக்கிய அகாதெமியின் தலைவர் அரவிந்த் மாலகத்தி, கன்னட மற்றும் கலாசாரத் துறை இயக்குநர் விஷுகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.