வரும் பேரவைத் தேர்தல் களப் பணியில் காங்கிரஸார் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என அக் கட்சியின் கர்நாடக பொறுப்பாளர் எம்.சி.வேணுகோபால் கேட்டுக் கொண்டுள்ளார்.
பெங்களூரு குயின்ஸ்சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் 2-ஆவது நாளாக கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியது: ஒரு சில கட்சி நிர்வாகிகளிடையே சிறு கருத்துவேறுபாடுகள் உள்ளது உண்மை. அதை பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். மாறாக கட்சிக்கு எதிராகச் செயல்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்பதை மனதில் கொண்டு அனைவரும் ஒற்றுமையாகப் பணியாற்ற வேண்டும். தேர்தலில் போட்டியிட அனைவருக்கும் ஆர்வம் உள்ளது. என்றாலும் ஒரு தொகுதியில் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்க முடியும்.
வாய்ப்பு கிடைத்தவரின் வெற்றிக்கு வாய்ப்பு கிடைக்காதவர்கள் பாடுபட வேண்டும். இந்த முறை வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு வேறு சந்தர்ப்பங்களில் வாய்ப்பு வழங்கப்படும். மேலிடத்தின் முடிவுபடி, அனைவரும் ஒற்றுமையாக பாடுபட்டு, கட்சியை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்றார். கூட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.பரமேஸ்வர், செயல் தலைவர் தினேஷ்குண்டுராவ், பிரசாரக்குழுத் தலைவர் எஸ்.ஆர்.பாட்டீல் உள்ளிடோர் கலந்து கொண்டனர்.