கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கு டிச.19-ஆம் தேதி முதல் கிறிஸ்துமஸ் விடுமுறை தொடங்குகிறது.
கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கு டிச.19-ஆம் தேதி முதல் டிச.30-ஆம் தேதி வரை கிறிஸ்துமஸ் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாள்களில் நீதிமன்றம் செயல்படாது. ஒருசில நாள்கள் மட்டும் விடுமுறை கால சிறப்பு இருக்கைகள் செயல்படும் என உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் விடுமுறை காலத்தில் தார்வாட் மற்றும் கலபுர்கி உயர்நீதிமன்ற கிளைகளில் நீதிமன்றம் முழுமையாக செயல்படாது. இந்த நீதிமன்ற வரம்புக்குள்பட்ட அவசர வழக்குகளை பெங்களூரு கிளையில் டிச.19, 21, 26, 28-ஆம் தேதிகளில் இயங்கும் விழாக்கால சிறப்பு இருக்கை முன் தாக்கல் செய்யலாம்.
விடுமுறை காலத்தில் உயர்நீதிமன்ற அலுவலகம் தினமும் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை செயல்படும். விடுமுறை சிறப்பு இருக்கை செயல்படும் நாள்களில் தினமும் காலை 10.30 முதல் மாலை 5 மணி வரை செயல்படும். இக்காலத்தில் சனிக்கிழமைகளில் நீதிமன்ற அலுவலகங்கள் இயங்காது என உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.