பெங்களூரில் டிச.29-ஆம் தேதி அஞ்சல் சேவைகள் குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து கர்நாடக அஞ்சல் வட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி: கர்நாடக அஞ்சல் வட்டத்தின் ஜெயநகர் தலைமை அஞ்சல் அலுவலகத்தின் சார்பில், பெங்களூரு, ஜெயநகர், 4-ஆவது 'டி' பிளாக்கில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலக முதல்மாடி அரங்கில், டிச.29-ஆம் தேதி காலை 11 மணி அளவில் அஞ்சல் சேவைகள் குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது.
பெங்களூரு தெற்கு மண்டலத்தைச் சேர்ந்த அஞ்சல்துறை வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அஞ்சல்களை கையாளுவது, விரைவு அஞ்சல் பொருள்கள், சுமைகள், பணவிடைகள், சேமிப்புக் கணக்குகள், பணச் சான்றிதழ்கள், அஞ்சலக சேவைகள் போன்ற அஞ்சல் துறையின் சேவைகளில் குறைகள் ஏதாவது இருந்தால், அவற்றை அஞ்சலகங்களின் மூத்த கண்காணிப்பாளர், கர்நாடக அஞ்சல் வட்ட பெங்களூரு மண்டல தெற்கு அலுவலகம், பெங்களூரு-560041 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
புகார்களுடன் ஆதாரங்களை இணைப்பது நல்லது. மேலும், புகார் கடிதத்தில் தெளிவான தொடர்பு முகவரியை குறிப்பிடவும்.