குடியரசுத் தலைவர் தேர்தலை முன்னிட்டு பெங்களூரு, விதானசெளதாவில் தீவிர ஏற்பாடுகள் நடந்துள்ளன.
குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் திங்கள்கிழமை நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக ராம்நாத்கோவிந்த், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக மீராகுமார் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த தேர்தலில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதியுடையவர்களாவர். இதற்கான தேர்தல் நாடெங்கும் நடைபெறுகிறது.
கர்நாடகத்தை சேர்ந்த எம்.பி.க்கள், எம். எல்.ஏ.க்கள் வாக்களிப்பதற்கு வசதியாக பெங்களூரு, விதானசெளதாவில் உள்ள 106}ஆம் எண் கொண்ட அறையில் வாக்குச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் 28 மக்களவை, 12 மாநிலங்களவை, 224 சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களிக்க இருக்கிறார்கள். கர்நாடகத்தை சேர்ந்த எம்.பி.க்கள் ஒருவரின் வாக்கு மதிப்பு 708, சட்டப்பேரவை உறுப்பினரின் வாக்கு மதிப்பு 131 ஆகும். காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய கட்சிகளின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தவறாமல் வாக்களிக்க தங்கள் உறுப்பினர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கியுள்ளன.
பாஜக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ராம்நாத்கோவிந்துக்கு வாக்களித்தால், காங்கிரஸ் மற்றும் மஜத எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீராகுமாரை ஆதரித்து வாக்களிக்கவுள்ளன. குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான ஏற்பாடுகளை சட்டப்பேரவை செயலகம் செய்துள்ளது.