குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிப்பு திட்டம் தோல்வி அடைந்தது குறித்து ஊழல் ஒழிப்புப்படை விசாரிக்க, கர்நாடக சட்டப்பேரவை பொது தொழில்துறை குழு பரிந்துரை செய்துள்ளது.
இதுகுறித்து சட்டப் பேரவையில் குழுவின் தலைவர் மலக்காரெட்டி திங்கள்கிழமை தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-
பெங்களூரு மாநகராட்சியில் சேரும் குப்பைகளைக் கொண்டு மின்சாரம் தயாரிக்க திட்டம் தீட்டப்பட்டது. இந்தத் திட்டத்தை செயல்படுத்த 2007-ஆம் ஆண்டில் ஒப்பந்தப் புள்ளியும் கோரப்பட்டது. சீனிவாஸ் காயத்ரி என்பவருக்கு சொந்தமான தனியார் நிறுவனம் இந்தத் திட்டத்தை 20 மாதத்தில் செயல்படுத்த ஒப்பந்தம் பெற்றது.
இந்தத் திட்டத்துக்கு ரூ.73 கோடியை செலவு செய்த பின்னரும், திட்டத்தைச் செயல்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் தோல்வி அடைந்தது குறித்து ஊழல் ஒழிப்புப்படையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி, 3 மாதங்களுக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிறுவனம், மாநகராட்சி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி மின் உற்பத்தியை பெருக்கவும் வல்லுநர்கள் அரசுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.