அதிமுகவில் உருவாகியுள்ள இரு அணிகளும் இணைந்து ஒன்றாவது தான் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு காட்டும் மரியாதையாகும் என கர்நாடக மாநில அதிமுக முன்னாள் செயலர் கே.ஆர்.கிருஷ்ணராஜ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்துக்காக எம்.ஜி.ஆரின் கடுமையான உழைப்பால் உருவாக்கப்பட்டதுதான் அனைத்திந்திய அண்ணா திராவிடமுன்னேற்றக் கழகம். எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பிறகு கட்சியை வழிநடத்திய ஜெயலலிதா, தேசிய அளவில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவாக்கினார்.
அவரது மறைவுக்கு பிறகு, அதிமுகவில் இரு அணிகள் உருவாகியுள்ளது உண்மையான அதிமுக தொண்டர்களுக்கு மனவேதனையை அளித்துள்ளது. இரு அணிகளும் இணைந்து ஒன்றாக அதிமுக கழகத்தை பலப்படுத்தி, இரட்டை இலை சின்னத்தை கட்டிக்காப்பது தான் உண்மையான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா தொண்டர்களின் விருப்பமாகும்.
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டுவிழா கொண்டாடப்படும் சமயத்தில், அவர் தொடங்கிய அதிமுகவை பிளவுப்படுத்தி வைத்திருப்பது அவருக்கு மரியாதை செலுத்தும் செய்கை அல்ல என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணரவேண்டும்.
இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்தை அணுக தேவையில்லை. அதிமுகவின் சட்டவிதிகளின்படி பொதுச் செயலர் பதவிக்கு தேர்தல் நடத்த வேண்டும். அதில் தேர்ந்தெடுக்கப்படும் நபர் யாரோ அவரே கட்சியை வழிநடத்த வேண்டும். அப்படி செய்வது தான் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோருக்குசெலுத்தும் உண்மையான மரியாதையாகும். அதிமுகவின் உண்மை தொண்டர்களின் எண்ணத்தை அறிந்து இரு அணிகளும் ஒன்றாக வேண்டும் என்றார் அவர்.