காட்டுத் தீ உருவாக காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், கடந்த 3 ஆண்டுகளில் இதுவரை 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக சட்டத் துறை அமைச்சர் டி.பி.ஜெயசந்திரா தெரிவித்தார்.
கர்நாடக சட்ட மேலவையில் புதன்கிழமை கேள்விநேரத்தின் போது காங்கிரஸ் உறுப்பினர் ஜெயமாலாவின் கேள்விக்கு வனத் துறை அமைச்சர் ரமாநாத்ராய் சார்பில் பதிலளித்து அவர் பேசியது:
கடந்த 3 ஆண்டுகளில் மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் 278 காட்டுத் தீ சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இவற்றில் 40 சத நிகழ்வுகள் (110 சம்பவங்கள்) நிகழாண்டில் மட்டும் நடந்துள்ளன.
2014-15-ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற பெரும்பாலான காட்டுத்தீ விபத்துகள் பண்டிப்பூர், நாகர்ஹொளே, எம்.எம்.ஹில்ஸ், குதிரேமூக், கொப்பதகுட்டா, பிலிகிரிரங்கனபெட்டா, சிவமொக்கா, ரானேபென்னூர் உள்ளிட்ட காடுகளில் நிகழ்ந்துள்ளன. இதில் 7737 ஹெக்டேர் காட்டுப்பரப்பு தீயில் கருகின என்றார்.
மற்றொரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக வனத் துறை அமைச்சர் ரமாநாத்ராய் பதிலளிக்கையில்,கர்நாடக வனத் துறையில் மொத்தம் 377 வனக் கண்காணிப்பாளர் பணியிடங்கள் உள்ளன. இதில் 137 பணியிடங்கள் காலியாக உள்ளன. காடுகளில் தீ பரவும் போதும் அதை அணைப்பதில் வனக் கண்காணிப்பாளர்களின் பணி முக்கியமானதாகும்.
ஒருசில இடங்களில் 5 வனக் கண்காணிப்பாளர்கள் தாற்காலிகமாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
காட்டுத் தீயை உருவாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் 3 ஆண்டுகளில் 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரு வழக்கில் மட்டுமே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.