கர்நாடக ஐ.ஏ.எஸ். அதிகாரி அனுராக்திவாரி, உத்தரப்பிரதேச மாநிலத்தின் லக்னெள நகரில் மர்மமான முறையில் இறந்தது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கர்நாடக பாஜக எம்பி ஷோபா கரந்தலஜே கடிதம் எழுதியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் அனுப்பிய கடிதம்: கர்நாடக ஐஏஎஸ் அதிகாரி அனுராக் திவாரி, கடந்தசில நாள்களுக்கு முன்பு லக்னெளவில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து தங்களிடம் தொலைபேசி மூலமாக பேசினேன்.
இந்தவிவகாரம் குறித்து மே 17-ஆம் தேதி தங்களுக்கு எழுதிய கடிதத்தில் நியாயமானவிசாரணை நடத்த கேட்டிருந்தேன். அண்மையில் எனக்கு கிடைத்த நம்பத்தகுந்த தகவலின்படி, உணவுதானிய கொள்ளை கும்பலின் தாக்குதலுக்கு அனுராக்திவாரி பலியாகிவிட்டாரோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.
இதுகுறித்து கர்நாடக நடுநிலை அதிகாரிகளிடையே விவாதிக்கப்பட்டுவருகிறது. சில காலத்திற்கு முன்பு உணவு மற்றும் பொதுவழங்கல் துறையில் பலகோடி ஊழல் விவகாரம் தோண்டியெடுக்கப்பட்டது.
இந்த விவகாரத்தை உணவு மற்றும் பொதுவழங்கல்துறை ஆணையர் என்ற நிலையில் அனுராக்திவாரி விசாரித்து வந்திருக்கிறார். ஊழல் குறித்து விளக்கமான அறிக்கையை அனுராக்திவாரி தயாரித்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தகோணத்தில் விசாரணையை முடுக்கிவிட்டால் நல்லது.
அனுராக்திவாரியின் மர்மச்சாவில் அதிகார பலம் வாய்ந்த மறைமுககைகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று அவரது சகோதரர் சந்தேகத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இந்த விவகாரம், உத்தரப்பிரதேசம் மற்றும் கர்நாடக மாநிலம் சம்பந்தப்பட்டிருப்பதால், இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
உணவு தானிய கொள்ளையர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரியவந்திருப்பதால் இந்த வழக்கு முக்கியத்துவம் பெறுகிறது. சிபிஐ விசாரணைக்கு ஒப்படைத்தால் உண்மை வெளியே வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.