கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு உச்ச வரம்பு 70 சதமாக அதிகரிக்க பரிசீலனை: சித்தராமையா

கர்நாடகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் 70 சத இடஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

கர்நாடகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் 70 சத இடஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
கர்நாடகத்தில் வாழும் மக்களின் சமூக, கல்வி நிலையை அறிந்து கொள்வதற்காக நடந்த கணக்கெடுப்பின் முடிவுகள் வெளியானவுடன், அதன் அடிப்படையில் கர்நாடகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் வழங்கப்பட்டுவரும் இடஒதுக்கீட்டின் விகிதம் 50-இல் இருந்து 70 ஆக உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படும்.
அனைத்து ஜாதியினரும் முன்னேற வேண்டும் என்பதே எங்கள் அரசின் நோக்கமாகும். எனது அரசின் நான்காண்டுகால திட்டங்களைக் கவனித்தால், சமூக முன்னேற்றத்திற்கு அதிகமுக்கியத்துவம் அளித்திருப்பதை உணரலாம். மேலும், முந்தைய அரசுகளைக் காட்டிலும் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதையும் காணலாம்.
கர்நாடகத்தில் கடும் வறட்சிநிலை உள்ளது. இதனால் பயிர்களை இழந்து கடன் அடைக்க முடியாத பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு தவறான முடிவை எடுத்துள்ளனர். தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடாக தலா ரூ.5 லட்சமும், அவர்களது மனைவிக்கு மாத ஓய்வூதியமாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.
மேலும் அவர்களின் குழந்தைகளுக்கு இலவச கல்வி வசதி வழங்கப்படும். இதுபோன்ற வசதிகளை வழங்கும் ஒரே அரசு கர்நாடகமாகும்.
மாநிலத்தில் கடும் வறட்சியின் போது மக்கள் வேலை தேடி வேறொரு ஊர்களுக்கு செல்லாததன் காரணம் அன்னபாக்கியா திட்டமாகும். இந்தத் திட்டத்தில் இலவச அரிசி வழங்கப்படுவதால் மக்கள் வயிறார சாப்பிடுகிறார்கள்.
நான்கு ஆண்டுகால ஆட்சியில் சட்டப்பேரவைத் தேர்தலின்போது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். கன்னடவழி பள்ளிகளுக்கு அரசின் எதிர்ப்பு இல்லை. அதேநேரம் ஆங்கிலப் பள்ளிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றதீர்ப்பை மதிக்கிறோம் என்றார்.


உத்தரப்பிரதேச காவல் துறைக்கு ஒத்துழைப்பு
முதல்வர் சித்தராமையா கூறியது: கர்நாடக ஐ.ஏ.எஸ். அதிகாரி அனுராக்திவாரி, உத்தரப்பிரதேசம் லக்னெளவில் மர்மமான முறையில் இறந்துள்ளார். பிரேதப் பரிசோதனையில் மாரடைப்பால் அவர் இறந்ததாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, உத்தரப் பிரதேச மாநில காவல் துறை விசாரணை மேற்கொண்டுள்ளது. அம்மாநில காவல் துறை விசாரணைக்கு கர்நாடகம் முழு ஒத்துழைப்பு அளிக்கும். ஒருசிலர் கூறுவது போல அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து விசாரணையில் தெரியவரும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com