காரின் கண்ணாடியை உடைத்து ரூ. 5 லட்சத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
பெங்களூரு ஊரகம் நெலமங்கலா அருகே உள்ள வாஜரஹள்ளியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணா. இவர் வியாழக்கிழமை பிற்பகல் பீன்யா காவல் சரகத்தில் உள்ள வங்கி ஒன்றில் ரூ. 5 லட்சம் பணத்தை எடுத்து, தனது காரில் வைத்துள்ளார்.
பின்னர், பகல்குண்டேயில் உள்ள வங்கி ஒன்றில் சொத்துவரி செலுத்துவதற்காக உள்ளே சென்றார். திரும்பி வந்து பார்த்த போது, காரிலிருந்த ரூ. 5 லட்சம் திருடு போனது தெரிய வந்தது. காரின் கண்ணாடியை உடைத்து பணத்தை திருடிச் சென்றவர்களை பகல்குண்டே போலீஸார் தேடி வருகின்றனர்.
வீடுகளில் புகுந்து தங்க நகை திருட்டு
பெங்களூரு, மே 19: இரு இடங்களில் வீடுகளில் புகுந்து தங்க நகையைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
பெங்களூரு குமாரசாமி லேஅவுட் பிகாசிபுரா 8-வது குறுக்குச் சாலையைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவியுடன் வியாழக்கிழமை வேலைக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பி வந்தார்.
இதனிடையே, வீட்டின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த ரூ. 3 லட்சம் மதிப்புள்ள தங்கநகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து குமாரசாமி லேஅவுட் போலீஸார் விசாரிக்கின்றனர். இதேபோல, ஓஎம்பிஆர் லேஅவுட் 6-வது பி குறுக்குச் சாலையைச் சேர்ந்தவர் ரகுநாராயணன். இவர் மே 5-ஆம் தேதி குடும்பத்தினருடன் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டு, வியாழக்கிழமை வீட்டிற்குத் திரும்பி வந்தார். இதற்கிடையே அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த யாரோ ரூ. 2.15 லட்சம் மதிப்புள்ள தங்கநகையை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து ராமமூர்த்திநகர் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.