கர்நாடகத்தில் சுற்றுப்பயணத்தைக் கைவிட்டு, வறட்சி நிவாரணத்தை மத்திய அரசிடமிருந்து பெற பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா முயற்சிக்க வேண்டும் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி, பெங்களூரு குயின்ஸ் சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் அவரது உருவப் படத்துக்கு சித்தராமையா மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர், சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறியது:-
வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிய சுற்றுப்பயணத்தை எடியூரப்பா மேற்கொண்டுள்ளார். பயணத்தின்போது விவசாயிகளின் கடனை ரத்து செய்ய கர்நாடக அரசு பின்வாங்கி வருவதாகப் புகார் கூறுகிறார். அவர் முதல்வராக இருந்தபோது, விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய மறுத்தார். தற்போது அவர் ஆட்சியில் இல்லாததால் கர்நாடக அரசை குற்றம்சாட்டுகிறார்.
சமயத்துக்கு ஏற்ற வகையில் சாதுர்யமாகப் பேசுவது எடியூரப்பாவுக்கு கை வந்த கலை. எனவே அவர் சுற்றுப்பயணத்தை கைவிட்டு, வறட்சி நிவாரணம் பெற மத்திய அரசிடம் கேட்டு பெற்ற, தில்லிக்குச் செல்ல வேண்டும்.
வறட்சியை அரசியல் ஆக்காமல், மத்திய அரசிடமிருந்து நிவாரண நிதியை பெற எடியூரப்பா முயற்சிக்க வேண்டும் என்றார்.
பேட்டியின்போது அமைச்சர் எச்.ஆஞ்சநேயா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
"காங்கிரஸýக்கு ஒரு மாதத்தில் புதிய மாநிலத் தலைவர்'
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக புதியவர் இன்னும் ஒரு மாதத்தில் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
மாநிலத் தலைவரை மேலிடத் தலைவர்கள் ஒருமனதாகத் தேர்ந்தெடுப்பார்கள். புதிய தலைவர் யார் என்பது குறித்து தெரியாது. ஊடகத்தினரைப்போல அதனை அறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன் என்றார்.