மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியால்தான் இந்தியாவில் தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்தது என்று காங்கிரஸ் மாநிலச் செயல் தலைவர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.
ராஜீவ் காந்தியின் நினைவு நாளையொட்டி, பெங்களூரு குயின்ஸ் சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் அவரது உருவப் படத்துக்கு ஞாயிற்றுக்கிழமை மலர்தூவி மரியாதை செலுத்திய பின்னர் தினேஷ் குண்டுராவ் பேசியது:-
ராஜீவ் காந்தி கொல்லப்படாமல் இருந்திருந்தால், 2-வது முறையாக பிரதமர் ஆகியிருப்பார். குறைந்த வயதில் பிரதமரான அவர், நாட்டை நவீன தொழில் வளர்ச்சிக்கு கொண்டு சென்றார். அவரது ஆட்சிக் காலத்தில் பரவலாக கணினி மயமாக்கப்பட்டது. ராஜீவ் காந்தியால் இந்தியாவில் தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்தது. இதனை யாராலும் மறுக்க முடியாது. காங்கிரஸ் கட்சியின் எழுச்சியை கர்நாடகத்திலிருந்து தொடங்க வேண்டும். காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்ற பாஜகவின் கோஷத்தை எல்லோரும் ஒற்றுமையாக செயல்பட்டு எதிர்கொள்வோம் என்றார் அவர்.