குழந்தைகளுக்கு கல்வி மட்டுமல்ல, நமது கலாசாரத்தையும் கற்பிக்க வேண்டும் என்றார் கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா.
பெங்களூரு கப்பன் பூங்கா ஜவகர் பால பவனில் செவ்வாய்க்கிழமை மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் துறை சார்பில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் அவர் பேசியது:
குழந்தைகளை கல்வி கற்க மட்டுமே பெற்றோர்கள் ஊக்குவிக்கக் கூடாது. பல்வேறு துறைகளில் பொது அறிவை வளர்க்கவும் ஈடுபடுத்துவது அவசியம். மேலும், இளம் வயதிலே விருது பெறும் அளவுக்கு குழந்தைகளைத் தயார்படுத்துவது அவசியம்.
நாட்டின் எதிர்காலமே குழந்தைகளிடம்தான் உள்ளது. நாட்டுப் பற்றை வளர்ப்பது அவசியம்.
குழந்தைகளால் பெற்றோர்களுக்கு மரியாதையும், கெளரவமும் கிடைக்கும் வகையில் வளர்க்க வேண்டும். கல்வியுடன் கலாசாரத்தை கற்பிப்பது அவசியம். குழந்தைகள் நலனுக்காக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறது. இதைப் பயன்படுத்தி மாணவர்களை முன்னேற்ற வேண்டும் என்றார்.
இதைத் தொடர்ந்து கல்வி, விளையாட்டில் சாதனை படைத்த மாணவர்களுக்கு ஆளுநர் விருதுகளை வழங்கினார்.