"அகிம்சையின் மகத்துவத்தை உணர்த்தியவர் வால்மீகி': முன்னாள் பிரதமர் எச்.டி.தேவெ கெளடா
அகிம்சை தத்துவத்தின் மகத்துவத்தை வெளிப்படுத்தியவர் மஹரிஷி வால்மீகி என்று மஜத தேசியத் தலைவரும், முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவெ கெளடா தெரிவித்தார்.
பெங்களூரில் உள்ள மஜத தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை அக் கட்சி சார்பில் நடைபெற்ற வால்மீகியின் பிறந்த நாள் விழாவைத் தொடக்கிவைத்து அவர் பேசியது:
வால்மீகி எழுதியுள்ள இராமாயணம், காலம் கடந்தும் நிலைத்து நிற்கும் மிகப்பெரிய காப்பியமாகும். இராமாயணத்தை இத்துணை அழகாக யாராலும் படைக்க இயலாது என்ற வகையில் இந்தியாவின் பெருமையை உலகம் போற்றும் வகையில் படைத்தளித்துள்ளார்.
ஆஞ்சேயருக்கும், சீதாபிராட்டிக்கும் இடையே நடக்கும் உரையாடல்களைக் கேட்க கேட்க காதுகள் இனிக்கும். அகிம்சை தத்துவத்தின் மகத்துவத்தை முதல்முதலாக உலகிற்கு தனது இலக்கியத்தின் மூலம் வெளிப்படுத்தியவர் வால்மீகி என்றார் தேவெ கெளடா.
முன்னதாக, மஜத பழங்குடியினர் அணி மாநிலத் தலைவர் ஹொதகெரே ரமேஷ் பேசுகையில், "பழங்குடியின சமுதாயத்தின் மேம்பாட்டுக்கு மஜதவின் பங்களிப்பு மகத்துவம் வாய்ந்ததாகும். குறிப்பாக முதல்வராகவும், பிரதமராகவும் பழங்குடியின சமுதாயத்தில் குறிப்பாக நாயக் சமுதாயத்தின் மேம்பாட்டுக்கு தேவெ கெளடா ஆற்றியிருக்கும் பணிகளை வரலாறு எப்போதும் மறக்காது.
அதற்கு நன்றிக் கடனாக அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் மஜதவை ஆட்சிக்கு கொண்டுவர பழங்குடியினர் குறிப்பாக நாயக் சமுதாயத்தினர் பாடுபட வேண்டும். நாயக் சமுதாயத்தை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தவர் தேவெ கெளடா. ஹரிஹர் நகரில் வால்மீகி குருபீடத்தை அமைக்க எச்.டி.குமாரசாமி 10 ஏக்கர் நிலத்தை அளித்திருக்கிறார்' என்றார்.
நிகழ்ச்சியில் எம்எல்சி டி.ஏ.சரவணா, மஜத செயல்தலைவர் நாராயணராவ், முதன்மைச் செயலாளர்கள் அனந்தையா, அசோக்குமார், காந்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.