பொது சுகாதாரத்தை மேம்படுத்த மாநில அரசு தீவிரம் காட்டிவருவதாக நகர்ப்புற வளர்ச்சி மற்றும் ஹஜ் துறை அமைச்சர் ரோஷன் பெய்க் தெரிவித்தார்.
பெங்களூரு புலிகேசிநகர் தொகுதியில் வியாழக்கிழமை பிபிஎல் அட்டை வைத்துள்ளவர்களுக்கு யஷ்யஷ்வினி சுகாதார அட்டையை வழங்கும் நிகழ்ச்சியில் அவர் பேசியது:
மாநிலத்தில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் சுகாதாரத்தை வழங்க வேண்டும் என்பதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. மாநிலத்தில் தேவையான இடங்களில் மருத்துவக் கல்லூரிகளைக் கட்டி அதிக அளவில் மருத்துவர்களை உருவாக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக பெங்களூரு சிவாஜிநகரில் உள்ள பெளரிங் மருத்துவமனையில் அக்டோபர் மாத இறுதியில் ரூ. 230 கோடி செலவில் நவீன மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டப்படும்.
முதல்வர் சித்தராமையா அதில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுவார். பெளரிங் மருத்துவமனையில் கட்டப்படும் மருத்துவக் கல்லூரி, மாநில அளவில் 2-வது பெரிய கல்லூரியாக திகழ்கிறது. வரும் நாள்களில் எங்கள் அரசின் சாதனைகளை மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களின் இல்லங்களுக்கும் கொண்டு செல்வோம்.
முதல்வர் சித்தராமையா தலைமையிலான ஆட்சியின் சாதனைகளால், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும். யஷ்யஷ்வினி சுகாதார அட்டையின் மூலம் பெங்களூரில் உள்ள 70 மருத்துவமனைகளில் பயனாளிகள் சிகிச்சைப் பெற முடியும் என்றார்.