அரசின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பாஜகவினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கர்நாடக தோட்டக்கலைத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.மல்லிகார்ஜுன் கேட்டுக் கொண்டார்.
தாவணகெரேயில் செவ்வாய்க்கிழமை கான்கிரீட் சாலையை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்துவைத்து அவர் பேசியது:
மாநிலத்தில் பரவலாக காங்கிரஸ் அரசு வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது. ஆனால், இதற்கு பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மாறாக வளர்ச்சிப் பணிகளைத் தொடங்குவதற்கு பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிப்புத் தெரிவித்து வருகின்றன.
பாஜக ஆட்சியில் இருந்த போது, மாநிலத்தின் வளர்ச்சிக்கு எவ்வித பணிகளையும் மேற்கொள்ளவில்லை. தாவணகெரே குடிநீர்த் திட்டத்திற்கு ரூ. 490 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் வறண்டு கிடக்கும் ஏரிகளில் தண்ணீரை சேமித்து வைக்க திட்டமிட்டுள்ளோம்.
இதன்மூலம் தாவணகெரே மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் நிரந்தரமாக குடிநீரை பெற முடியும். அடுத்த 4 ஆண்டுகளில் மாவட்டம் முழுவதும் கேபிள்கள் பதிக்கப்பட்டு, மின்விநியோகம் செய்யப்படும். இந்தத் திட்டத்திற்காக அரசு ரூ. 200 கோடியை ஒதுக்கித் தந்துள்ளது. முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு மக்களுக்கு தேவையான பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது என்றார்.