பெங்களூரு மாநகர தெற்கு மண்டல போலீஸார் 49 திருட்டு வழக்குகளில் 30 பேரை கைது செய்து, ரூ. 1.24 கோடி மதிப்புள்ள பொருள்களைப் பறிமுதல் செய்தனர்.
மீட்கப்பட்ட நகை, பொருள்களை புதன்கிழமை ஜெயநகர் செளத் எண்ட் சதுக்கத்தில் உள்ள இணை காவல் அலுவலகத்தில் பார்வையிட்டு மாநகரக் காவல் கூடுதல் ஆணையர் மாலினி கிருஷ்ணமூர்த்தி பேசியது: மாநகர தெற்கு மண்டல போலீஸார், ரூ. 1.24 கோடி மதிப்புள்ள தங்கநகை, வெள்ளிப்பொருள்கள், 57 செல்லிடப்பேசிகள், மோட்டார் சைக்கிள்கள், மடிக்கணினிகள், 429 கிலோ எடையுள்ள செம்மரக்கட்டைகளை மீட்டுள்ளனர். பொதுமக்களுக்கு தங்கள் உடமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.
திருட்டு வழக்கிள் சிறப்பாக செயல்பட்டு, குற்றவாளிகளை கைது செய்து பொருள்களை மீட்டுள்ள தெற்கு மண்டல போலீஸாரை பாராட்டுகிறேன் என்றார். நிகழ்ச்சியில் தெற்கு மண்டல காவல் துணை ஆணையர் சரணப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.