பெங்களூரில் பலத்த மழை பெய்து வருவதால், மாநகரின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து கடுமையாக பாதிப்புக்குள்ளானது.
கடந்த சில நாள்களாக பெங்களூரு உள்பட கர்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில், புதன்கிழமை மாலை 5 மணியளவில் தொடர்ந்து பலத்த மழை பெய்ததால் சாந்திநகர், சிவாஜிநகர், ராஜாஜிநகர், மல்லேஸ்வரம், பிடிஎம் லேஅவுட், எச்எஸ்ஆர் லேஅவுட், மெஜஸ்டிக், காந்திநகர், மடிவாளா, மகாலட்சுமிலேஅவுட், கோரமங்களா, வில்சன்கார்டன், மாகடிசாலை, பசவவேஸ்வரநகர், எச்.ஏ.எல் சாலை உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் சாலைகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது.
சாலைகளில் தண்ணீர் தேங்கின. இதனால், வேலைமுடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர். சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன போக்குவரத்து தடைபட்டது. பெரும்பாலான சாலைகளில் வாகனங்கள் மணிக்கணக்கில் காத்திருந்து ஊர்ந்து சென்றன.