ஹுக்கா பார்களை( புகைப்பதற்கான மையங்கள்) மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெங்களூரு வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் தெரிவித்தார்.
புகையில்லாத நகர திட்டத் தொடக்க விழா பெங்களூரு மாநகராட்சி தலைமை அலுவலத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் விழிப்புணர்வு கையேட்டை வெளியிட்டு, ஜார்ஜ் பேசியது:-
பெங்களூரு போன்ற நகரங்களில் பல்வேறு நாடுகள், மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் குடியேறி வசித்து வருகின்றனர். அவர்களின் வாழ்க்கை முறைகள் வித்தியாசமாக உள்ளன. ஒரு சிலர் புகைப்பதைப் பெருமையாகக் கருதுகின்றனர். புகைப்பதால் புற்றுநோய் உள்ளிட்டவை பரவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே புற்றுநோயால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க புகைப்பதை தடுப்பது அவசியம்.
பெங்களூரில் பல்வேறு இடங்களில் ஹுக்கா மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வரும் இளைஞர்கள் புகைத்துவிட்டு தங்களது உடல் நலத்தை பாழ்படுத்திக் கொண்டு வருகின்றனர். எனவே அவற்றை மூடுமாறு தொண்டு நிறுவனங்கள் கேட்டுக் கொண்டுள்ளன. இதன்படி, சுகாதாரத் துறை அமைச்சர் ரமேஷ்குமாரிடம் தெரிவித்து, அவரின் உதவியுடன் ஹூக்கா பார்களை மூட நடவடிக்கை எடுக்கப்படும்.
கர்நாடகத்தில் உள்ள ஆறரை கோடி பேரில் 2 கோடி பேர் புகைப்பதற்கு அடிமையாகி உள்ளனர். இதில் 30 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருவது வேதனை அளிக்கிறது என்றார். நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் மஞ்சுநாத் பிரசாத், புற்றுநோய் மருத்துவர்கள் விஷால்ராவ், திரிவேணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.