பொதுமக்கள் அனைவருக்கும் சுகாதாரம் கிடைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
பெங்களூரு வாணி விலாஸ் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை சுகாதார பல்கலைக்கழகம், பரிசோதனை மையம் உள்ளிட்ட கட்டடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் அவர் பேசியது: சர்வதேச அளவிலும், மாநிலத்திலும் மக்கள்தொகை வளர்ச்சி அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் நோய்களின் தாக்கமும் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.
தொடக்கத்திலே நோய்களைக் கண்டறிந்து அதற்கான சிகிச்சை பெற்றால், நோய்களைக் குணமாக்க முடியும். பெரும்பாலானவர்கள் அலட்சியம் காட்டுவதால் நோய்கள் முற்றி, பல்வேறு பிரச்னைகளை சந்திக்க நேரிடுகிறது. வாணி விலாஸ் மருத்துவமனை மகப்பேறு மருத்துவத்தில் சிறந்த சாதனைகளை செய்து வருகிறது.
அந்த மருத்துவமனை வளாகத்தில் சுகாதார பல்கலைக்கழகம், பரிசோதனை மையம் உள்ளிட்டவைகளின் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றுள்ளது. சுகாதாரத் துறையில் மேலும் பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. மக்கள் அனைவருக்கும் சுகாதாரம் கிடைக்க தேவையான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும் என்றார். நிகழ்ச்சியில் அமைச்சர் சரண்பிரகாஷ் பாட்டீல், எம்எல்ஏ ஜமீர் அகமதுகான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.