சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துவரும் அதிமுகவின் வி.கே.சசிகலாவுக்கு சிறையில் விதிகளை மீறி சொகுசு வாழ்க்கை ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளதாக புகார் அளித்த அந்த மாநில சிறைத் துறையின் முன்னாள் டிஐஜி ரூபாவுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் அளித்து கௌரவிக்கப்பட்டுள்ளது.
மெச்சத்தக்க வகையில் அவர் பணியாற்றி வருவதற்காக இந்தப் பதக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், இந்தப் பதக்கத்தை ரூபாவிடம் அந்த மாநில ஆளுநர் வஜுபாய் வாலா அளித்தார். நிகழ்ச்சியில் அந்த மாநில முதல்வர் சித்தராமய்யா, மாநில உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ரூபாவுடன் மேலும் சில காவல் துறை உயரதிகாரிகளுக்கும் குடியரசுத் தலைவர் பதக்கம் அளிக்கப்பட்டது. பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் 4 ஆண்டு சிறைத் தண்டனை அனுபவித்துவரும் சசிகலாவுக்கு பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக அந்த மாநில அரசிடம் ரூபா புகார் அளித்தார். சிறப்பு வசதிகளை அவருக்கு செய்துதருவதற்காக சிறைத் துறை டிஜிபி ரூ.2 கோடி லஞ்சம் வாங்கியதாகவும் அவர் குற்றம்சாட்டினார். அவரது அதிரடியான அறிவிப்பு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தப் புகாரைத் தொடர்ந்து, டிஐஜி ரூபாவை பெங்களூரு சாலைப் போக்குவரத்து, சாலைப் பாதுகாப்புத் துறையின் ஆணையராக துறை மாற்றம் செய்தது கர்நாடக அரசு. சிறைத் துறை டிஜிபியும் வேறு துறைக்கு அதிரடியாக மாற்றப்பட்டார்.