கேரளத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்து அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுற்றுலாத் துறை இணை இயக்குநர் அனில் தெரிவித்தார்.
பெங்களூரில் செவ்வாய்க்கிழமை கேரள மாநில சுற்றுலாத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியது:
கடவுளின் சொந்த நாடாக கருதப்படும் கேரளா, சுற்றுலாவின் சொர்க்க பூமியாகத் திகழ்கிறது. வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து கேரளத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2017-ஆம் ஆண்டில் இது 20 சதவீதமாக உயர்ந்துள்ளது.
வெளிமாநிலங்களிலிருந்து கேரளத்துக்கு சுற்றுலா வரும் பயணிகளில் கர்நாடகம் 2-ஆவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு கர்நாடகத்திலிருந்து 9.33 லட்சம் பேர் கேளத்துக்கு சுற்றுலா வந்தனர். நிகழாண்டு இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என நம்புகிறோம். இதையடுத்து, சுற்றுலாத் துறையை மேம்படுத்த அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றார்.