பெங்களூரு மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர் ரேகாவின் கணவர் கதிரேசன் கொலையைக் கண்டித்து பாஜகவினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெங்களூரு ஜே.சி.நகர் கூட்ஷெட் சாலையில் அம்பேத்கர் சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மக்களவை உறுப்பினர் பி.சி.மோகன், பாஜக மாநிலச் செயலாளர் ரவிக்குமார், முன்னாள் கவுன்சிலர் கணேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பி.சி.மோகன் பேசியது: மாநிலத்தில் இதுவரை பாஜகவைச் சேர்ந்த 24 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு முழுமையாக சீர்குலைந்துள்ளது. சில சமூக விரோதிகள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்கின்றனர்.
கடலோர மாவட்டங்களில் நடைபெற்று வந்த மதக் கலவரம், பெங்களூருக்கும் பரவியுள்ளது வேதனை அளிக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் பட்டப்பகலில் வீட்டை விட்டு வெளியே வர பெண்கள், சிறுமிகள் அச்சம் கொண்டுள்ளனர். தொடர்ந்து பெண்களிடம் தங்கச் சங்கிலி பறிப்புகள் அதிகரித்துள்ளன என்றார்.