சுற்றுச்சூழலைப் பாதுகாக்க உலகளவில் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலரும், சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும் விமானத்தை கண்டுபிடித்து, அதில் பயணம் செய்தவருமான பெர்டிராட் பிக்கார்டு கேட்டுக் கொண்டார்.
பெங்களூரு ராமைய்யா அறிவியல் பல்கலைக்கழத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அறிவியல் கருத்தரங்கில் அவர் பேசியது:
உலகளவில் வாகனங்களைக் கக்கும் புகையாலும், மாசுக்களை ஏற்படுத்தும் செயல்களாலும் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, பூமி வெப்பமயமாகி வருகிறது. இதைத் தடுக்க வேண்டியது அனைவரின் கடமை. இதனைக் கருத்தில் கொண்டு பல்வேறு முயற்சி, சவால்களைத் தொடர்ந்து சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும் விமானத்தை கண்டுபிடித்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி உலகளவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன்.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க உலகளவில் அனைவரும் ஒன்றுபட வேண்டும். சிறப்பு அழைப்பின் பேரில் இந்தியா வந்துள்ள நான், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் நாம் இப்போதே விழிப்படைய வேண்டும். தவறினால் எதிர்காலத்தில் நமது சந்ததியினர் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.
சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும் விமானத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது, பலரும் வீண்முயற்சி என்று எனது ஊக்கத்தை மட்டுபடுத்தினர். ஆனால், விடாமுயற்சியில் ஈடுபட்டு, தற்போது எரிவாயு இல்லாமல், சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும் விமானத்தை கண்டறிந்து, அதில் பல நாடுகளுக்கு பயணம் செய்துள்ளேன்.
மாணவர்கள் புதிய தொழில்நுட்பங்களைக் கண்டறியும்போது எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும், இலக்கை நோக்கு பயணம் செய்யுங்கள். இறுதியில் கனவின் இலக்கை அடைவது நிச்சயம் என்றார்.
நிகழ்ச்சியில் ராமைய்யா அறிவியல் பல்கலைக்கழத்தில் துணை வேந்தர் சங்பால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.