பெங்களூரை இந்தியாவின் இரண்டாம் தலைநகரமாக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கர்நாடக தொழில் துறை அமைச்சர் ஆர்.வி.தேஷ்பாண்டே கடிதம் எழுதியிருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள கடித விவரம்:
நமது நாட்டின் இரண்டாம் தலைநகரம் தென்னிந்தியாவில் அமைக்கப்பட வேண்டுமென்பது இப்பகுதி மக்களின் நீண்டகால விருப்பமாகும். அந்தவகையில், பெங்களூரை இந்தியாவின் இரண்டாம் தலைநகரமாக்குவதற்கு கருத வேண்டும்.
இந்தியாவுக்கு இரண்டாம் தலைநகரம் அவசர தேவையாகும். அதற்கு பெங்களூரு மிகச் சிறந்த தேர்வாகும். இந்தியா போன்ற மிகப்பெரிய தேசத்தை ஆள்வதற்கு ஒரேஒரு தலைநகரம் போதாது. ஒருங்கிணைந்த நிர்வாகம், கட்டமைப்பு ரீதியான சீர்த்திருத்தம், நாட்டின் மறுகட்டமைப்பு, பன்னாட்டு நல்லுறவு ஆகியவை இன்றைய தேவையாக இருப்பதால், அதற்கேற்ப ஒருங்கிணைந்த நிர்வாகத்தில் கடைசி குடிமகனின் பங்களிப்பு அவசியமாகிறது.
எனவே, தென்னிந்திய மக்களுக்கு தில்லி தொலைவில் இருப்பதை மறுக்க இயலாது. இதனால், தென்னிந்திய மக்கள் தங்கள் குறைகளை தீர்க்க தில்லிக்கு பயணப்பட வேண்டியுள்ளது. தென்னிந்தியமக்களின் தனி இயல்புகளுக்கு தகுந்தவாறு இங்கு இரண்டாம் தலைநகரம் அமைவது சரியாக இருக்கும்.
இரண்டாம் தலைநகரம் அமைவதற்கு பெங்களூரு மிகச்சிறந்த மாநகரமாகும். பெங்களூரில் நல்ல தட்பவெப்பம், பேரிடரில் பாதிக்கப்படாத சூழல் உள்ளது. அனைத்து வகையான மக்களும் பெங்களூரில் வசிக்கிறார்கள். தொழில் வளர்ச்சி, தகவல் தொழில்நுட்பத்திலும் பெங்களூரு சிறந்து விளங்குகிறது. தில்லிக்கு அடுத்தப்படியாக உலகளவில் புகழ்பெற்ற நகரமாக பெங்களூரு விளங்குகிறது. இந்த கருத்தியலை ஏற்று பெங்களூரை இரண்டாம் தலைநகரமாக்க கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.