கர்நாடகத்தில் பாஜக மேற்கொண்ட மாற்றத்திற்கான பயணத்துக்கு மக்களிடையே ஆதரவு பெருகியுள்ளதாக மாநில பாஜக துணைத் தலைவரும், பெங்களூரு மத்திய தொகுதி மக்களவை உறுப்பினருமான பி.சி.மோகன் தெரிவித்தார்.
பெங்களூரு செலுவாதிபாளையாவில் ஞாயிற்றுக்கிழமை பொங்கல் பண்டிகையைத் தொடக்கிவைத்து அவர் பேசியது: கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா தலைமையில் மாற்றத்திற்கான பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பயணம் மூலம் பாஜக மீது மக்களிடையே ஆதரவு பெருகியுள்ளது. முதல்வர் சித்தராமையா சாதனை பயணம் என்ற பெயரில் மக்களின் வரிப் பணத்தை வீணடித்து வருகிறார்.
வளர்ச்சிப் பணிகள் என்ற பெயரில் காங்கிரஸ் கட்சிக்கான விளம்பரத்தைத் தேடி வருகின்றனர். மாநிலத்தில் இதுவரை ரூ. 1300 கோடியை விளம்பரத்துக்காக காங்கிரஸ் அரசு செலவிட்டுள்ளது. மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்ற பிறகு நாட்டின் பாதுகாப்பு அதிகரித்துள்ளது.
பாதுகாப்பு உபகரணங்கள் உள்நாட்டிலேயே தயாரிப்பது அதிகரித்துள்ளது. நாட்டின் வளர்ச்சியை சகிக்க முடியாத காங்கிரஸார், தேவையில்லாமல் மத்திய அரசை விமர்சித்து வருகின்றனர். பாஜக தலைவர் எடியூரப்பாவை சிறைக்குச் சென்றவர் என்று முதல்வர் சித்தரமையா தரக்குறைவாக பேசி வருகிறார். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு சிறைக்கு செல்லப் போவது யார் என்பது சித்தராமையாவுக்கு தெரியவரும்.
தேர்தல் பிரசாத்தில் கடந்த 5 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசில் நடந்த ஊழல்களை மக்களிடத்தில் கொண்டு செல்வோம் என்றார்.
நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர் ரேகா கதிரேசன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் கணேஷ், கதிரேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.