கர்நாடக முன்னாள் அமைச்சர் திப்பேசாமி புதன்கிழமை பெங்களூரு தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
சித்ரதுர்கா செல்லுகெரே வட்டம், காட்டப்பனஹட்டிய சேர்ந்தவர் முன்னாள் அமைச்சர் திப்பேசாமி (76). இவர் சித்ரதுர்கா மாவட்டம், செல்லுகெரே சட்டப்பேரவைத் தொகுதியில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டு, மஜத ஆட்சியில் தேவெ கெளடா, ஜே.எச்.பாட்டீல் ஆகியோரின் அமைச்சரவையில் சிறிய நீர்ப்பாசனத் துறை, கலால் துறை அமைச்சராகப் பணியாற்றினார்.
பின்னர் பாஜகவில் இணைந்து ஜகலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்று, எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராகப் பணியாற்றினார். கடந்த சில நாள்களாக உடல் நலம் குன்றியதையடுத்து பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். புதன்கிழமை காலை அவர் காலமானார். அவருக்கு மனைவி விமலம்மா, மகன் குமாரசாமி, மகள் பவ்யா ஆகியோர் உள்ளனர். திப்பேசாமியின் மறைவுக்கு முன்னாள் பிரதமர் தேவெ கெளடா, எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.