உடல் உறுப்புகளை தானம் செய்ய பொதுமக்கள் முன்வர வேண்டும் என நாராயணா மருத்துவக் குழுமத்தின் உடல் உறுப்பு அறுவை மாற்று வல்லுநர் சஞ்சய்ராவ் தெரிவித்தார்.
பெங்களூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சர்வதேச உடல் உறுப்பு தானம் தினத்தையொட்டி உடல் உறுப்பு மாற்று அறுவை செய்து கொண்ட சிறுவர்களுக்கு பாராட்டி, சான்றிதழ், இனிப்பு வழங்கிய பின்னர் அவர் பேசியது: சர்வதேச அளவில் ஆக. 13-ஆம் தேதி உடல் உறுப்பு தானம் நிகழ்ச்சி அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி பெங்களூரில் உடல் உறுப்புகளை தானம் பெற்று, மாற்று அறுவைச் சிகிச்சை மூலம் பயனடைந்துள்ள சிறுவர்களைப் பாராட்டுவதில் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். சர்வதேச அளவில் உடல் உறுப்புதானம் செய்வதில் மக்கள் விழிப்புணர்வு அடைந்துள்ளனர்.
ஆனால் இந்தியாவில் அதுதொடர்பான விழிப்புணர்வு குறைவாக உள்ளது. அமெரிக்காவில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை 28 சதவீதமாக உள்ளது. ஸ்பெயின் நாட்டில் உடல் உறுப்பு தானம் செய்பவகளின் எண்ணிக்கை 35 சதவீதமாக உள்ளது. ஆனால், இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை 0.8 சதமாக உள்ளது.
எனவே, இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் மட்டுமன்றி தொண்டு நிறுவனங்களும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். விபத்து உள்ளிட்டவைகளில் மூளைச்சாவு அடைந்த 1 நபர் மூலம் 8 பேருக்கு உடல் உறுப்புகளை தானம் செய்வதன் மூலம் மறுவாழ்வு அளிக்க முடியும். இந்தியாவில் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ள பலர், மாற்று அறுவை செய்து கொள்ள உடல் உறுப்புகள் கிடைக்காமல் இறந்து போவது வேதனை அளிக்கிறது. எனவே பொதுமக்களிடம் உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.