கர்நாடக சட்ட மேலவையில் புதிய உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 11 பேர் பதவியேற்றனர்.
கர்நாடகத்தில் 75 உறுப்பினர்கள் கொண்ட சட்ட மேலவைக்கு 25 பேர் சட்டப் பேரவையில் இருந்தும், 25 பேர் உள்ளாட்சி அமைப்புகளில் இருந்தும், 7 பேர் ஆசிரியர் தொகுதிகளில் இருந்தும், 7 பேர் பட்டதாரி தொகுதிகளில் இருந்தும், 11 பேர் நியமன உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்படுவர்.
இந்த நிலையில், அண்மையில் 3 ஆசிரியர், 3 பட்டதாரி தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் பாஜகவுக்கு 3 இடங்களும், மஜதவுக்கு 2 இடங்களும், காங்கிரஸுக்கு ஒரு இடமும் கிடைத்தன. அதன்படி, சட்டமேலவையில் காங்கிரஸுக்கு 34, பாஜகவுக்கு 19, மஜதவுக்கு 14, சுயேச்சைகளுக்கு 3 இடங்கள் உள்ளன. இதுதவிர, 4 இடங்கள் காலியாகியுள்ளன.
இந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற தேர்தலில், அரவிந்த் குமார் அரலி, சி.எம்.இப்ராகிம், கே.கோவிந்த்ராஜ், தேஜஸ்வினி கெளடா, எஸ்.எல்.தர்மேகெளடா, கே.பி.நஞ்சுண்டி விஸ்வகர்மா, பி.எம்.ஃபாரூக், ரகுநாத்ராவ் மல்காபுரா, என்.ரவிகுமார், எஸ்.ருத்ரேகெளடா, கே.ஹரீஷ்குமார் ஆகிய 11 பேர் பதவியேற்கும் நிகழ்ச்சி பெங்களூரில் உள்ள விதான சௌதாவில் திங்கள் கிழமை நடைபெற்றது.
இவர்களுக்கு மேலவைத்தலைவர் டி.எச்.சங்கரமூர்த்தி, பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
விழாவில் துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர், எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா, ஊரக வளர்ச்சி- பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் கிருஷ்ணபைரே கெளடா, மகளிர்- குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஜெயமாலா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.