பாஜகவில் உள்கட்சிப் பூசல் நிலவுவதைத் தொடர்ந்து, புட்டசாமி தான் வகித்து வந்த மாநில பிற்படுத்தப்பட்டோர் அணியின் தலைவர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
கர்நாடக சட்டமேலவையில் சட்டப்பேரவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் 11 இடங்களுக்கான தேர்தல் அண்மையில் நடைபெற்றது.
இதில், சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பாஜக 4 வேட்பாளர்களை நிறுத்தியது. இதில், தன்னை வேட்பாளராக அறிவிக்காததால் அதிருப்தி அடைந்துள்ள முன்னாள் அமைச்சர் புட்டசாமி, பாஜக மாநில பிற்படுத்தப்பட்டோர் அணியின் தலைவர் பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை பாஜக மாநிலத்தலைவர் எடியூரப்பாவுக்கு அனுப்பிவைத்துள்ளார்.
கடிதத்தில் புட்டசாமி கூறியிருப்பதாவது:-
"எந்தகாரணத்துக்காக சட்ட மேலவைத் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கவில்லை என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறேன். சட்டமேலவைக்கு மீண்டும் வேட்பாளராக்குவதோடு, எதிர்க்கட்சித் தலைவராகவும் நியமிக்கவிருப்பதாகத் தெரிவித்திருந்தீர்கள்.
கொடுத்த வாக்குறுதியை ஏன் காப்பாற்றவில்லை. கொலை மிரட்டல் வந்தபோதும், முந்தைய காங்கிரஸ் அரசின் பல்வேறு ஊழல்களை அம்பலப்படுத்தினேன். எல்லா சவால்களையும் துணிச்சலோடு எதிர்த்தேன். அப்போதைய ஆளும் கட்சியினர் விமர்சித்தபோது, பாஜகவினர் ஆதரவாக யாரும் பேசவில்லை.
கடந்த 45 ஆண்டுகளாக கட்சியின் நலனுக்காகவும், பிற்படுத்தப்பட்டோரின் நலனுக்காக உழைத்துள்ளேன். அண்மையில் நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சி நடத்திய விதம் வேதனை அளித்தது" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், புட்டசாமியின் குற்றச்சாட்டுகள் குறித்து பதிலளிக்க எடியூரப்பா மறுத்துவிட்டார்.