கடையின் கதவை உடைத்து ரூ. 1.6 லட்சம் மதிப்புள்ள செல்லிடப்பேசிகளை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.
பெங்களூரு ஹனுமந்தநகர் பிருந்தாவன்நகர் 5-ஆவது பிரதான சாலையில் சதீஷ் என்பவருக்கு சொந்தமான செல்லிடப்பேசி விற்பனை கடை உள்ளது. திங்கள்கிழமை அதிகாலை கடையின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த யாரோ, ரூ. 1.6 லட்சம் மதிப்புள்ள 15 புதிய செல்லிடப்பேசிகள், 5 பழைய செல்லிடப்பேசிகளை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து ஹனுமந்தநகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எல்ஐசி அலுவலகத்தில் தீ விபத்து: ஆவணங்கள் எரிந்து சேதம்
பெங்களூரு, மார்ச் 13: எல்.ஐ.சி அலுவலகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் கணினி, பிரிண்டர், ஆவணங்கள் சேதமடைந்தன.
பெங்களூரு எம்.ஜி.சாலை அனில்கும்பளே சதுக்கத்தில் உள்ள எல்.ஐ.சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் அலுவலகத்திலிருந்த கணினி, பிரிண்டர் உள்பட பல்வேறு ஆவணங்கள் தீக்கிரையானது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர். இதுகுறித்து கப்பன்பூங்கா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.