கர்நாடகத்தில் முதல்வர், அமைச்சர்களிடையே ஒற்றுமையில்லை என முன்னாள் பிரதமர் தேவெ கெளடா தெரிவித்தார்.
கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள லோக் ஆயுக்த நீதிபதி விஸ்வநாத் ஷெட்டியை செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்த பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
மாநிலத்தில் முதல்வர், அமைச்சர்கள் ஒற்றுமையாகப் பணியாற்ற வேண்டும். ஆனால் கர்நாடகத்தில் முதல்வரும், அமைச்சர்களும் அவரவர் விருப்பத்திற்கேற்ப செயல்படுகின்றனர். அவர்களிடம் கூட்டு முயற்சி என்பதில்லை. குறிப்பாக மாநிலத்தில் உள்துறை அமைச்சரின் கைகள் கட்டப்பட்டுள்ளன. அவரை சுதந்திரமாக செயல்படவிட்டால் மட்டுமே மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க முடியும்.
மாநிலத்தில் காவல்துறை அதிகாரிகள் முதல்வர் அல்லாதா வேறு ஒருவரின் உத்தரவிற்கு அடிபணிந்து செயல்பட வேண்டியுள்ளது. லோக் ஆயுக்த நீதிபதி விஸ்வநாத் ஷெட்டி, தனது அலுவலகத்திற்குள்ளேயே தாக்கப்பட்டுள்ளார்.
இதுபோன்ற சம்பவம் வேறு எந்த மாநிலத்திலும் நடைபெற சாத்தியமில்லை. உள்துறை வேறு நபர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால், மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது என்றார்.